பரபர கடலூர்! பாமகவால் போராட்டத்தால் நிறுத்தப்பட்ட என்எல்சி பணி இன்று தொடக்கம்! போலீஸ் குவிப்பு
கடலூர்: பாமக சார்பில் நேற்று முற்றுகை போராட்டம் நடந்தபோது அந்த கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டு தடியடி நடத்தப்பட்டது. இதனால் கடலூர் மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் நேற்று தடைப்பட்ட என்எல்சி விரிவாக்க பணிகள் இன்று காலையில் போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தற்போது விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. அதாவது என்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணிக்கு பரவனாற்றுக்கு என்எல்சி சுரங்க நீரை எடுத்து செல்லும் வகையில் இந்த பணி நடக்கிறது.

2 நாட்களுக்கு முன்பு இந்த பணி தொடங்கியது. அப்போது வளையமாதேவி பகுதியில் கால்வாய் வெட்டும் பணி ஜேசிபி, பொக்லைன் இயந்திரங்கள் மூலம் துவங்கப்பட்டது. இரண்டு மாதங்களில் கதிர் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிற்சிகள் பொக்லைன் இயந்திரங்களால் அழிக்கப்பட்டு கால்வாய் வெட்டப்பட்டன.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணிகள் நடந்து வந்தது. இதனை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நேற்று நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தை தொடர்ந்து என்எல்சி விரிவாக்க பணிகள் நேற்று நிறுத்தப்பட்டது. இதற்கிடையே போராட்டத்தி்ல தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசினார். அப்போது தமிழ்நாட்டில் இருந்து என்எல்சி நிறுவனம் வெளியேற வேண்டும் என தெரிவித்தார்.

இந்த வேளையில் பாமகவினர் என்எல்சியை முற்றுகையிட சென்றனர். அப்போது போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு நடந்தது. போலீஸ் வாகனங்கள் மீது கல் வீசப்பட்டது. இதையடுத்து தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டு வீசி போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டனர். அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். இதனை கண்டித்து பல இடங்களில் பாமகவினர் போராட்டம் நடத்துவதால் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பான சூழல் உருவானது. இதையடுத்து மாலையில் அன்புமணி ராமதாஸ் விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும் கூட என்எல்சி விரிவாக்க பணிக்கு தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில் தான் கடலூர் மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே தான் நேற்று தடைப்பட்ட என்எல்சி கால்வாய் அமைக்கும் பணிகள் வளையமாதேவியில் இன்று மீண்டும் தொடங்கியது. ஏற்கனவே 2 நாட்கள் பணி நடந்த நிலையில் இன்று 3வது நாள் பணி தொடங்கி உள்ளது. போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கால்வாய் வெட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் அங்கு மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications