குறிஞ்சிப்பாடி வேட்பாளர் மாற்றப்பட்டதால் ஆத்திரம்: கடலூர் அதிமுக அலுவலகத்தை சூறையாடிய அதிமுகவினர்!
கடலூர்: குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மாற்றப்பட்டதால் ஆத்திரமடைந்த தொண்டர்கள் அதிமுக அலுவலகத்தை சூறையாடினார்கள்.
Recommended Video
அமைச்சரின் பிரசார வாகனத்தையும் அவர்கள் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

அதிமுக சார்பில் நேற்று முன்தினம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளரான இராம.பழனிச்சாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று மாலையில் அவர் திடீரென மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் செல்விராம ஜெயம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த இராம.பழனிச்சாமி ஆதரவாளர்கள் கூத்தப்பாக்கத்தில் உள்ள அதிமுகவின் கடலூர் மத்திய மாவட்ட அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அங்கு மத்திய மாவட்ட செயலாளரும் தொழில் துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் தேர்தல் பிரசாரத்திற்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரசார வாகனத்தை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.
பின்னர், அமைச்சர் அமரும் அறைக்குள் நுழைந்தவர்கள் அங்கிருந்த அவரது இருக்கை, மேஜை மற்றும் நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்தினர். இதற்குள் தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் அதிமுகவினர் அங்கு திரண்டதால் வன்முறையில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். போலீசாரும் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால், அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.












Click it and Unblock the Notifications