அதிமுக வார்டு செயலாளர் ஓட ஓட வெட்டிக் கொலை.. கடலூரில் அதிகாலையில் நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்!
கடலூர்: கடலூரில் அதிமுக வார்டு செயலாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பைக்கில் சென்றுகொண்டிருந்தவரை வெட்டிக் கொன்றுவிட்டு மர்ம கும்பல் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடலூர் நவநீதம் நகர் பகுதியை சேர்ந்தவர் பத்மநாதன். இவருக்கு 43 வயது. இவர் அதிமுக வார்டு செயலாளராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருப்பனம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற கோவில் கலை நிகழ்ச்சிகளை பார்த்து விட்டு இன்று காலை வீடு திரும்பியுள்ளார்.

அப்போது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த பத்மநாதன் மீது மர்ம கும்பல் காரை மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறி பத்மநாதன் கீழே விழுந்துள்ளார். அப்போது காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல், பத்மநாதனை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது. புதுச்சேரி மாநில எல்லை பகுதியான திருப்பனாம்பாக்கம் என்ற இடத்தில் பத்மநாதன் வெட்டிக் கொல்லப்பட்டார்.
கடலூர் பகுதியைச் சேர்ந்த நபர்கள் முன்விரோதம் காரணமாக வெட்டியதாக பாகூர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பத்மநாதன் கடந்த ஆண்டு பாஸ்கர் என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். பாஸ்கரின் கொலைக்கு பழி வாங்க இந்த கொலை சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக அரசியல் பிரமுகர்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. கடந்த மாதம் கடலூரில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் புஷ்பநாதன் வெட்டிக் கொல்லப்பட்டார். அதைத்தொடர்ந்து, சேலத்தை சேர்ந்த அதிமுக பகுதி செயலாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் அதிகாலையில் வாக்கிங் செல்லும்போது கொலை செய்யப்பட்டார். அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் கடலூர் அதிமுக வார்டு செயலாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications