ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. அதிரடி மோடில் பாஜக.. சீனுக்கு வரும் சிடி ரவி.. முக்கிய ஆலோசனை!
கடலூர்: கடலூரில் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி தலைமையில் மாநில செயற்குழு கூட்டம் நடக்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக முக்கிய முடிவு எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜகவில் இருந்து வரும் சூழலில், தனித்து போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு மூலம் தமிழ்நாடு அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸின் திருமகன் ஈவேரா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன் பின்னர் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர்.
14 பேர் கொண்ட பணிக்குழு எதுக்கு? ஈரோடு கிழக்கில் பாஜக போட்டியா? நயினார் நாகேந்திரன் சொன்ன பதில்!
அதிமுக - தமாக கூட்டணி
இந்த நிலையில் இன்று காலை அதிமுகவின் மூத்த தலைவர்களான ஜெயக்குமார், வளர்மதி உள்ளிட்டோர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசனை சந்தித்தனர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்டதால், மீண்டும் தமாக-வுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
அதிமுக வேட்பாளர் யார்?
இதுகுறித்து ஜிகே வாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஓரிரு நாட்களில் அதிமுக கூட்டணி வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். அதேபோல் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தனித்தனியாக செயல்படுவதால், இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்று கேள்வியும் எழுந்தது. இதனிடையே இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர், உடனடியாக பாஜக சார்பாக தேர்தல் பணிக் குழு அறிவிக்கப்பட்டது. இதனால் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்தது.
தனித்துப் போட்டி?
ஏனென்றால் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி ஒன்றாக தேர்தலில் போட்டியிட்டாலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து களமிறங்கியது. இதனால் இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவே பார்க்கப்பட்டது. இதனிடையே கடலூரில் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி தலைமையில் பாஜக செயற்குழு கூட்டம் நாளை நடக்க உள்ளது.
முக்கிய ஆலோசனை
இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக மாநில பொதுச்செயலாளர் ஏபி முருகானந்தம் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் பாஜக மாநில விவசாய அணியின் செயலாளர் ஜிகே நாகராஜும் உத்தேச பட்டியலில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.