ம்ஹும் முடியவே முடியாது! நடராஜர் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு! ஒத்துழைக்காத தீட்சிதர்கள்!
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோவில் ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத் துறையினர் இன்றோடு ஆய்வை முடித்துக் கொண்ட நிலையில், நடராஜர் கோவில் தீட்சிதர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என ஆணையருக்கு அறிக்கை அளிக்க உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கலாம் என கடந்த 2014ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. அதன்படி சுமார் 8 ஆண்டுகளாக உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி தீட்சிதர்களே அனைத்தையும் நிர்வகித்து வருகின்றனர்.
நேற்று மற்றும் இன்று அதாவது 7, 8 ஆகிய தேதிகளில் சிதம்பரம் நடராஜர் கோயிலின் கணக்கு வழக்குகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும், இதுகுறித்த ஆவணங்களை தர வேண்டும் என்றும் கோயில் தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை தற்போது நோட்டீஸ் அனுப்பியது.
சிதம்பரம் நடராஜர் கோவில் கணக்கில் அரசு தலையிடக் கூடாது! அது நல்லது அல்ல! சசிகலா எச்சரிக்கை!
சிதம்பரம் நடராஜர் கோவில்
ஆனால் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு ஆய்வுக்கு வருவதை கைவிட வேண்டுமென்று இந்து சமய அறநிலையத்துறைக்கு தீட்சிதர்கள் கடிதம் அனுப்பினர். ஆனால் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 2014 முதல் கோவில் வரவு செலவு கணக்குகளை, சொத்துக்களின் விவரங்களை, பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை குழுவினர் நேற்றும் இன்றும் என இரண்டு நாட்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்திருந்தனர்.
தீட்சிதர்கள் எதிர்ப்பு
அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகிக்கும் தீட்சதர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி ஆய்வுக் குழு ஆய்வு செய்ய அதிகாரம் இல்லை என தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
ஒத்துழைப்பு இல்லை
இந்த நிலையில் நேற்று இன்றும் என இரண்டு நாட்கள் ஆய்வுக்கு தேவையான ஆவணங்களை தீட்சதர்களிடம் பலமுறை கேட்டும் அவர்கள் எதற்கும் ஒத்துழைக்காததால் இன்று மாலை 5 மணியுடன் ஆய்வை முடித்துக் கொண்டு சென்றனர்.
சட்ட நடவடிக்கை
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரிகள், இரண்டு நாட்கள் சிதம்பரம் நடராஜர் கோவில் வரவு செலவு கணக்கு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்ய வந்ததும் அதற்கு தீட்சிதர்கள் தரப்பில் எந்தவித உத்தரவும் அளிக்கவில்லை. இதுகுறித்து இந்து சமய அறநிலை துறை ஆணையருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் மேலும் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என கூறினர்.