நெய்வேலி NLC சுரங்கத்தில் திடீர் தீ.. பல கோடி ரூபாய் இயந்திரம் நாசம்.. தீ விபத்து ஏற்பட்டது ஏன்?
கடலூர்: நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 3 சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுத்து, அனல் மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நெய்வேலி என்.என்.சி இரண்டாவது சுரங்கத்தில் நிலக்கரி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட்டில் திடீரென தீப்பிடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட நிலக்கரி கன்வேயர் பெல்ட் மூலமாக மின் உற்பத்திக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த கன்வேயர் பெல்ட்டில் தான் திடீரென தீப்பற்றியது. தொடர்ந்து, எம்டிசி எனும் இயந்திரத்தில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
உடனடியாக ஊழியர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பிலான எம்டிசி இயந்திரம் தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு மாற்றாக புதிய ஆட்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து என்.எல்.சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications