சிதம்பரம் கொத்தட்டை சுங்க சாவடியை முற்றுகையிட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள்- சுமூக முடிவு!
கடலூர்: விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டை சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்க சாவடி வழியே 50 முறை ஒரு தனியார் பேருந்து சென்று வந்தால் ரூ14,090 கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். மேலும் கொத்தட்டை சுங்க சாவடியையும் முற்றுகையிட்டு தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டையில் சுங்க சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கசாவடிக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொத்தட்டை சுங்க சாவடியில் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கொத்தட்டை சுங்க சாவடி வழியாக 50 முறை சென்று வந்தால் ரூ14,090 கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால் கட்டணத்தை கணிசமாகக் குறைக்க வேண்டும் என்பது தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை. இந்த கோரிக்கையை முன்வைத்து கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. மேலும் கொத்தட்டை சுங்க சாவடியை முற்றுகையிட்டும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாகவும் இன்று மட்டும் தனியார் பேருந்துகள் கட்டணம் இல்லாமல் அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications