கடலூரில் பள்ளி வேன் மீது திருச்செந்தூரில் இருந்து வந்த ரயில் மோதியது.. 2 மாணவர்கள் பலி
கடலூர்: கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் ஆள் இல்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது, தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதியது. இந்த விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்தாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சில மாணவர்கள் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. திருச்செந்தூரில் இருந்து சென்னை வரும் ரயில் மோதி இந்த விபத்து நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் ரயில்வே கேட் ஒன்று உள்ளது. இந்த ரயில்வே கேட்டை பல்வேறு வாகனங்கள் கடந்து செல்வது வழக்கம். ரயில் வரும் நேரங்களில் மட்டும் பொதுமக்கள் கவனமாக செல்வார்கள். இந்த வழித்தடத்தில் அவ்வப்போது ரயில்கள் வருவது வழக்கம் ஆகும். சென்னையிலிருந்து கடலூர் வழியாக தினமும் சுமார் 15 ரயில்கள் இயக்கப்படுகின்றன. அத்துடன் சென்னை- தஞ்சாவூர் இடையேயான மெயின் வழித்தடம் என்பதால், பல்வேறு ரயில்கள் தினமும் சென்று வருகின்றன.

செம்மங்குப்பம் போல் உள்ள ரயில்வே கேட்டை பள்ளி வாகனங்கள், இருசக்கர வாகன ஓட்டிகள், சரக்கு வாகனங்கள் பல கடந்து செல்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் இன்று காலை தனியார் பள்ளி வேன் ஒன்று ரயில்வே கேட்டை கடக்க முயன்றது. அப்போது திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், கண் இமைக்கும் நேரத்தில் பள்ளி மாணவர்கள் சென்ற வேன் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பள்ளி வேன் அப்பளம் போல் நொறுங்கியது.
பள்ளி வேன், ரயில்வே தண்டாவளத்தில் தள்ளி போய் விழுந்தது. இந்த விபத்தில் சின்ன காட்டு சாகை சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த திராவிட மணி மகள் சாருமதி (16), மாணவர் விமலேஷ்(10) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஓட்டுநர் சங்கர்(47), தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த விஷ்வேஸ் (16), நிவாஸ்(13), சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த மாணவர் செழியன்(15) ஆகியோர் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்தை பார்க்கவந்த அண்ணாதுரை (55) என்பவரும் காயம் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.
வேன் மீது ரயில் மோதியதை பார்த்த உடனே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து குழந்தைகளை மீட்டனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த விபத்துக்கு ரயில்வே கேட் கீப்பர் காரணம் என்று கூறப்படும் நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications