கேட் கீப்பர் தப்பு செய்திருந்தாலும் சிவப்பு சிக்னலை மீறி ரயில் வந்தது எப்படி? ரயில்வேக்கு 3 கேள்வி!
கடலூர்: கடலூரில் செம்மங்குப்பத்தில் ரயில்வே கேட்டை திறக்குமாறு பொதுமக்கள் சொன்னதால் திறந்ததாக கூறும் சம்பவத்தில் லெவல் கிராசிங் கேட் திறந்திருந்தால் இரு புறமும் ரயில்களுக்கு சிக்னல் சிவப்பில் இருக்கும், அதையும் மீறி ரயில் எப்படி வந்தது? என்ற கேள்வி எழுந்தது.
கடலூர் செம்மங்குப்பத்தில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பள்ளி வேன் மீது ரயில் மோதி 50 கி.மீ. தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது. இந்த கோர விபத்தில் மாணவி சாருமதி, மாணவர்கள் நிமலேஷ், செழியன் ஆகியோர் உயிரிழந்துவிட்டனர்.

மேலும் விஸ்வாஸ், வேன் டிரைவர் சங்கர் ஆகியோர் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காலையில் தனது அப்பா, அம்மாவிடம் பள்ளிக்கு போய்விட்டு வருகிறேன் என கூறி டாட்டா காட்டிய குழந்தைகள் சென்ற சில நிமிடங்களில் உயிரிழந்து கிடக்கும் காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்துகிறது.
இது குறித்து விசாரணையில் பொதுமக்கள் கூறியதாவது: வேன் மீது ரயில் மோதியதும் வேன் தூக்கி வீசப்பட்டது. ஆனாலும் கேட் கீப்பர் தனது அறையை விட்டு வெளியே வரவில்லை. அத்தனை சப்தம் கேட்டும் அவர் வராதது ஏன்? அவர் குடித்துவிட்டு தூங்கிவிட்டார்.
நிறைய நேரங்களில் இரவு நேரத்தில் கேட்டை மூடுவார்கள். அதன் பிறகு கேட்டை திறக்காமல் போய் தூங்கிவிடுவார்கள். சில நேரங்களில் கேட்டை மூடாமலேயே டீக்கடைக்கு போய்விடுவார்கள். யாராவது பார்த்துவிட்டு கேட்டால் "இல்லை எங்களுக்கு ரயில் வரும் என போன் வந்தால்தான் கேட்டை மூடுவோம்" என்பார்கள்.
இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கேட் கீப்பருக்கு அந்த வழியாக ரயில் வருவதை ஸ்டேஷன் மாஸ்டர் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து காலை 7.06 மணிக்கு கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கேட்டை மூடினார்.
அப்போது அந்த வழியாக வந்த வேன் டிரைவர், கேட் கீப்பரிடம், கேட்டை திறக்குமாறு தெரிவித்தார். மேலும் சிலர் பங்கஜை மிரட்டினர். இதனால் அவரும் கேட்டை திறந்துவிட்டார். அவர் அப்படி செய்திருக்கக் கூடாது என தெரிவித்தனர். இந்த நிலையில் பங்கஜ் சர்மா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவன் விஸ்வாஸ் கூறுகையில், "கேட் திறந்திருந்தது. ரயில் வரும் சப்தமும் கேட்கவில்லை. அதனால் வேனை ஓட்டுநர் இயக்கினார். அப்போது திடீரென ரயில், வேன் மீது இடித்தது. இதில் வேன் தூக்கி வீசப்பட்டு, நான் கீழே கிடந்தேன். எனக்கு மயக்கம் எல்லாம் வரவில்லை" என்றார்.
இதுகுறித்து வேன் ஓட்டுநர் சங்கர் கூறுகையில், "நான் வேனை இயக்கும் போது கேட் திறந்திருந்தது. ரயில் வரும் சப்தமும் கேட்கவில்லை. இதனால்தான் வேனை முன்னோக்கி இயக்கினேன்" என கழுத்தை அசைக்க முடியாமல் மிகவும் சிரமத்துடன் அவர் பேசினார்.
கடலூரில் நடந்த விபத்துக்கு கேட் கீப்பர் மீதும் வேன் ஓட்டுநர் மீதும் மாறி மாறி புகார் கூறினாலும் சில லாஜிக்கான கேள்விகள் எழத்தான் செய்கிறது. இதுகுறித்து சென்பாலன் என்பவர் தனது ட்வீட்டில்,
"1. லெவல் கிராசிங் கேட் திறந்து இருந்தால் இரு புறமும் ரயில்களுக்கு சிக்னல் சிவப்பில் இருக்கும். அதை மீறி எப்படி இரயில் வந்தது?
2. தன் எல்லைக்குட்பட்ட இரயில்வே கேட் மூடப்பட்டுள்ளதா திறந்துள்ளதா என்பதை ஸ்டேசன் மாஸ்டர் தன் இடத்தில் இருந்தே கண்காணிக்க முடியும். இரயில் வரும்போது திறந்து இருந்தால் உடனடியாக இரயில் ஓட்டுநருக்கு தெரிவித்து நிறுத்த வேண்டும் என்பது விதிமுறை. அது என்ன ஆனது?
3. கேட் மூடப்படவில்லை என்றால், இரயிலுக்கு எப்படி சிக்னல் கிடைத்தது?
ஒன்று மட்டும் தெரிகிறது. இது சாதாரண human error இல்லை. இந்திய இரயில்வே சிஸ்டம் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாட்டில் இயங்குகிறது. கேட்கீப்பர் மீதும், வேன் டிரைவர் மீதும் பழியை போட்டு தப்பிக்காமல் உண்மையான குறைபாடுகளை களைய வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications