அந்த பேரு ஏன் வச்சிருக்கீங்க? முதல்ல நீக்குங்க! திருமண மண்டபத்தின் ஓனருக்கு விசிக பிரமுகர் மிரட்டல்
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் திருமண மண்டபத்தின் பெயரில் ஒரு குறிப்பிட்ட ஜாதியின் பெயர் வந்ததை அடுத்து அந்த பெயரை நீக்கிவிட்டு வேறு பெயரை வைக்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஒருவர் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த தம்பிபேட்டை பகுதியில் D.R. நாயுடு மினி ஹால் அமைந்துள்ளது. இந்த மண்டபம் கடந்த 6 மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. இங்கு அவ்வப்போது சுப நிகழ்ச்சிகள் நடந்து வந்தன.

இந்த நிலையில் தம்பிபேட்டை பகுதியை சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் இளையமாறன் அவ்வழியாக செல்லும் போது இந்த திருமண மண்டபத்தை பார்த்துள்ளார். அதன் பெயரையும் பார்த்துள்ளார்.
உடனே அந்த மண்டபத்தின் ஓனர் ராமலிங்கத்தை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆரம்பத்தில் அந்த மண்டபத்தின் தோற்றம் குறித்து நல்ல மாதிரியாக பேசிய இளையமாறன், மண்டபத்தின் பெயர் கூட நல்லா இருக்கு சார், ஆனால் அந்த நாயுடு எனும் வார்த்தையை மட்டும் எடுத்துவிடுங்கள் என கூறியுள்ளார்.
அதற்கு மண்டபத்தின் உரிமையாளர், இந்த மண்டபத்தை பணம் செலவழித்து கட்டியது நான், இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கு, பெயரை மாற்ற சொல்ல நீங்கள் யார் என கேட்டுள்ளார். மேலும் உங்களுக்கு இந்த பெயர் பிடிக்காவிட்டால் நீங்கள் இந்த மண்டபத்தை உங்கள் வீட்டு நிகழ்ச்சிக்கோ கட்சி நிகழ்ச்சிக்கோ புக் செய்யாமல் விடுங்கள் என தெரிவித்துள்ளார்.
அதற்கு இளையமாறனோ, "இந்த மண்டபத்திற்கு நாயுடு சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமா வருகிறார்கள். அனைத்து ஜாதி, மதத்தினரும் வருகிறார்கள். அப்படியிருக்க எதற்காக பெயரில் நாயுடுவை சேர்த்துள்ளீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு ஓனரோ செட்டியார் மண்டபம், ரெட்டியார் மண்டபம் என எத்தனையோ மண்டபங்களுக்கு முதல் பெயருடன் ஜாதி பெயரும் ஒட்டிக் கொண்டு வந்திருக்கிறது.
அங்கெல்லாம் போய் கேட்க வேண்டியதுதானே. இங்கே மட்டும் ஏன் கேட்கறீங்க என ராமலிங்கம் வாக்குவாதம் செய்துள்ளார். அதற்கு இளையமாறனோ இதை கேட்க ஊர் ஊராகவா செல்ல முடியும், என் கண்ணில் படுவது என் ஊரில் இருப்பதைத்தான் நான் கேட்க முடியும்? முதலில் வாக்குவாதம் செய்வதை நிறுத்திவிட்டு இன்னும் ஒரு வாரத்தில் இந்த பெயரில் உள்ள நாயுடு எனும் வார்த்தையை நீக்குங்கள் என மிரட்டியதாக தெரிகிறது.
இல்லாவிட்டால் மண்டபத்தின் வாசலில் நாயுடு சமூகத்தினர் மட்டும்தான் வர வேண்டும் என நீங்கள் வைப்பது போல் நாங்களே போர்டு வைத்துவிடுவோம், வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்துவோம் என எச்சரித்துள்ளார். மேலும் மண்டப உரிமையாளருடன் பேசியதை ரெக்கார்டு செய்து அதை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட இளையமாறன் போராட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து டி.ஆர்.நாயுடு மினி ஹால் உரிமையாளர் ராமலிங்கம் குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் குறிஞ்சிபாடி காவல் நிலைய போலீஸார் ஜாதி பிரச்சினை என்பதால் சுமூகமாக பேசி தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications