அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் ரூ. 15 கோடி ஆவணங்கள் பறிமுதல்.. காலை முதல் நடந்த ரெய்டில் அதிரடி!
கடலூர்: பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வத்தின் வீடு உள்பட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடியாக சோதனை நடத்தியதில் 15 கோடி மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2011-2016ஆம் ஆண்டு காலகட்ட அதிமுக ஆட்சியின்போது கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி தலைவராக இருந்தவர் பன்னீர்செல்வம். இவர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யாவின் கணவர். நகராட்சி தலைவராக இருந்தபோது பன்னீர்செல்வம், நகராட்சிக்கு சொந்தமான சைக்கிள் ஸ்டாண்ட் உரிமம் டென்டர் விடுவதில் ரூ.20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

அதன் பேரில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம், அப்போதைய நகராட்சி கமிஷனர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை முதல் பண்ருட்டி, சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.
கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பண்ருட்டி காமராஜர் நகரில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வத்தின் வீடு, அலுவலகம், சென்னையில் உள்ள பன்னீர்செல்வத்தின் வீடு உள்ளிட்ட 6 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், 15 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகராட்சியில் கடந்த 2011-2016ம் ஆண்டுகளில் நகரமன்ற தலைவராக பதவி வகித்த பன்னீர்செல்வம் மற்றும் நகராட்சி ஆணையராக பணிபுரிந்த பெருமாள் ஆகிய இருவரும் பண்ருட்டி பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தை வாகன நிறுத்துமிடமாக அமைக்க ஏலம் விட்டதில் சுமார் 20 லட்சம் வரை முறைகேடு செய்திருப்பது தெரிய வந்தது.
இந்த முறைகேடு தொடர்பாக கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் 27.02.2024 அன்று P.பன்னீர்செல்வம், த/பெ, பக்கிரி, முன்னாள் நகர மன்ற தலைவர், பண்ருட்டி நகராட்சி மற்றும் T.பெருமாள், த/பெ, திருவேங்கடம், முன்னாள் நகராட்சி ஆணையர், பண்ருட்டி நகராட்சி ஆகியோர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து இன்று 28.02.2024ஆம் தேதி காலை 06.30 மணி முதல் P.பன்னீர்செல்வம், த/பெ, பக்கிரி, காமராஜ் நகர், பண்ருட்டி, T.பெருமாள், த/பெ, திருவேங்கடம், எண்.17/1, தியாகராஜன் தெரு, ஜவஹர் நகர், பெரம்பூர், சென்னை ஆகியோரது வீடுகள் மற்றும் எதிரிகளுடன் தொடர்புடைய குற்ற சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மற்றும் அவர்களது பினாமிகள் என கருதப்படும் நபர்களான M.பெருமாள், த/பெ, மண்ணாங்கட்டி, கந்தன் பாளையம், பண்ருட்டி, A.செந்தில்முருகன், த/பெ, ஆறுமுகம், இந்திரா காந்தி சாலை, பண்ருட்டி, M.பிரசன்னா (எ) சம்பத்ராஜ், த/பெ, மீனாட்சிசுந்தரம், எண்.33, கடலூர் மெயின்ரோடு, திருவதிகை, பண்ருட்டி மற்றும் D.மோகன்பாபு, த/பெ, துரைராஜ், எண்.67, சத்தியமூர்த்தி தெரு, பண்ருட்டி ஆகியோர்களது வீடுகளிலும் கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ந.தேவநாதன் அவர்கள் தலைமையில் 6 குழுக்கள் வீடு சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின்போது மேற்சொன்ன குற்ற சம்பவத்தில் தொடர்புடைய ஆவணங்கள், நில மற்றும் மனை சொத்து ஆவணங்கள் மொத்தம் 47 கைப்பற்றப்பட்டன. அவற்றின் சொத்து மதிப்பு ரூ.15,64,32,237 ஆகும். இந்த முறைகேடு தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications