கலர் கலரா கள்ளநோட்டு! அச்சடிச்சது விசிக பிரமுகர்? கடலூரே கதிகலங்கி போச்சு..வலை போட்டு தேடும் போலீஸ்
கடலூர்: கடலூர் அருகே அதிக அளவில் கள்ள நோட்டு புழக்கத்தில் இருப்பதாக காவல் துறை அதிகாரிகளுக்கு தொடர் புகார்கள் வந்தன. இதை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளருக்கு சொந்தமான இடத்தில் கள்ள நோட்டு அச்சடிக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், விசிக மாவட்ட பொருளாளர் உள்ளிட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய சிக்கல் என்றால் அது கள்ள நோட்டுகள் தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அண்டை நாடுகளில் இருந்து கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு இந்தியாவில் புழக்கத்தில் விடப்பட்டன. இதை அடுத்து 1000 ரூபாய், 500 ரூபாய் உள்ளிட்ட நோட்டுகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டது.

தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டும் திரும்ப பெறப்பட்ட நிலையில், 500 ரூபாய் நோட்டுகள் மக்களிடையே அதிக அளவில் புழக்கத்தில் இருக்கின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கள்ள நோட்டு கும்பலின் நடமாட்டம் அதிகரித்ததோடு கள்ள நோட்டு புழக்கமும் அதிகரித்தது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்த ஆண்டனி செல்வன், திண்டுக்கல்லை சேர்ந்த முகம்மது ரியாஸ், சங்கரன்கோவில் அய்யாதுரை, மதுரை இசக்கிமுத்து ஆகியோர் அடங்கிய கும்பலை கைது செய்தனர்.
இதற்கிடையே கடலூர் மாவட்டத்திலும் கள்ள நோட்டு கும்பலின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஒயின்ஷாப், மளிகை கடை, காய்கறி சந்தை உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி கள்ள நோட்டு புழக்கம் இருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் கள்ள நோட்டு கும்பலை கைது செய்ய தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில் தான் கடலூரில் கள்ள நோட்டு அச்சடித்து வந்த இடத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அந்த இடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகருக்கு சொந்தமானது எனக் கூறப்படும் நிலையில் அவர் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம் ராமநத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திட்டக்குடி அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவன் மகன் செல்வம் (வயது-39) என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளராக செயல்பட்டு வருகிறார். இவருக்கு சொந்தமான வயலில் தகர ஷீட் கொட்டாய் அமைத்து அதில் கள்ள நோட்டு அடிக்கும் இயந்திரங்களை வைத்து கள்ள நோட்டு அடித்து புழக்கத்தில் விட்டு வருவதாக ராமநத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து இன்று காலை அவரது வயலில் உள்ள தகர ஷீட் கொட்டகைக்கு சென்ற போது செல்வம் அங்கிருந்து ஓடினார், உள்ளே சென்று பார்த்தபோது கள்ள நோட்டு அச்சடித்தது தெரிய வந்தது. தொடர்ந்து கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம், வாக்கி டாக்கிகள், அச்சடிக்கும் பேப்பர், ரூ. 83,000 - ரொக்க பணம், வாக்கி டாக்கி - 1, லேப்டாப் - 1, ஏர்கன் - 1, பிஸ்டல் ஏர்கன் - 1, கவுண்டிங் மெஷின் - 1, பிரிண்டிங் மெஷின் - 1, பேப்பர் பண்டல் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.
தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விவசாய நிலத்தில் ஷெட் அமைத்து கள்ள நோட்டுகள் அச்சடித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் செல்வம் உள்ளிட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கள்ள நோட்டு அச்சடிக்கும் விவகாரத்தில் சிக்கிய செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவதாக விசிக கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications