சிறைக்குள் தற்கொலைக்கு முயன்ற வட சென்னை 'டான்'.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை - என்னாச்சு?
எண்ணூர் தனசேகரன் சிறைக்குள் இருந்த போதிலும், வெளியே உள்ள தனது அடியாட்கள் மூலமாகப் பல கொலை, கட்டப்பஞ்சாயத்துகளை இவர் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கடலூர்: வட சென்னையை ஆட்டிப்படைத்து வரும் பயங்கர ரவுடி எண்ணூர் தனசேகரன், சிறைக்குள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறைக்குள் இருந்தபடியே துணை ஜெயிலரை கொல்ல முயன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எண்ணூர் தனசேகரன் திடீரென தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.
30-க்கும் மேற்பட்ட ரத்த அழுத்த மாத்திரைகளைச் சாப்பிட்டதால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

பயங்கர ரவுடி
வட சென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன். பிரபல ரவுடியான இவர், எண்ணூர் முதல் வியாசர்பாடி வரை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இவர் மீது 30-க்கும் மேற்பட்ட கொலை, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே, கொலை வழக்கு ஒன்றில் சில ஆண்டுகளுக்கு முன்பு கைதான ரவுடி எண்ணூர் தனசேகரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது எதிர் கோஷ்டியை சேர்ந்தவர்களால் இவருக்கு ஆபத்து ஏற்படும் எனக் கருதப்பட்டதால் கடலூர் மத்தியச் சிறைக்கு அவர் மாற்றப்பட்டார்.

சிறைக்குள் இருந்தே 'ஸ்கெட்ச்'
எண்ணூர் தனசேகரன் சிறைக்குள் இருந்த போதிலும், வெளியே உள்ள தனது அடியாட்கள் மூலமாகப் பல கொலை, கட்டப்பஞ்சாயத்துகளை இவர் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான புகார்கள் குவிந்ததால் அவர் அடைக்கப்பட்டிருக்கும் சிறையில், சிறைத்துறை துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் கடந்த ஆண்டு சோதனை செய்தார். அப்போது அவரிடம் இருந்த செல்போன் உள்ளிட்ட பொருட்களை அவர் பறிமுதல் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த தனசேகரன், துணை ஜெயிலர் மணிகண்டனை கொலை செய்யத் திட்டமிட்டார்.

ஜெயிலர் வீட்டில் குண்டுவீச்சு
அதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதியன்று துணை ஜெயிலர் மணிகண்டன் வீட்டில் மர்மநபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விசாரணையில், எண்ணூர் தனசேகரன்தான் தனது ஆட்களை ஏவி இந்த செயலை செய்தது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக, அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு தனிமை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை போலீஸார் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.

தற்கொலை முயற்சி
இதனிடையே, கையில் செல்போன் இல்லாததால் முன்பு போல அவரால் வெளியுலகில் ஆதிக்கம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விரக்தியில் இருந்த ரவுடி தனசேகரனுக்கு ரத்த அழுத்தம் அதிகமானதாகக் கூறப்படுகிறது. எனவே அவருக்கு ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மாத்திரைகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், நேற்று முன்தினம் தன்னிடம் இருந்த 30-க்கும் மேற்பட்ட ரத்த அழுத்த மாத்திரைகளை விழுங்கிய தனசேகரன் தற்கொலைக்கு முயன்றார். தகவலறிந்த போலீஸார், உடனடியாக அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications