கந்துவட்டி கொடுமையால் போலீஸ்காரர் தற்கொலை! அசலுடன் வட்டி கட்டிய பிறகும் பணம் கேட்டு டார்ச்சர்!
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கந்துவட்டிக் கொடுமையால் போலீஸ்காரர் ஒருவரே தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாங்கிய 5 லட்சம் ரூபாய் கடனுக்கு அசலுடன் சேர்த்து வட்டி செலுத்தப்பட்ட பிறகும், கூடுதலாக பணம் கேட்டு மன உளைச்சல் கொடுத்திருக்கிறார் வட்டிக்கு பணம் கொடுத்தவர்.
5 லட்ச ரூபாய் கடனுக்கு 12 லட்ச ரூபாயை எடுத்து வைக்காவிட்டால் நடப்பதே வேறு என தாதாவை போல் பெண் ஒருவர் விடுத்த மிரட்டலே காவலர் மனம் நொந்து தற்கொலை செய்துகொள்ள காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டம் மதுவானை மேடு துறிஞ்சிகொல்லையை சேர்ந்தவர் செல்வகுமார். 27 வயதாகும் இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் 10-வது பட்டாலியனில் காவலராக பணியாற்றி வந்தார். குடும்பச் சூழல் காரணமாக கடலூர் மாவட்டம் பெரிய நெல்லிகொல்லையை சேர்ந்த அனிதா என்ற பெண்ணிடம் 5 லட்ச ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கியிருக்கிறார். அந்த தொகையை வட்டியும் அசலுமாக சேர்த்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பே திருப்பியும் செலுத்தியிருக்கிறார்.

வட்டிக்கு வட்டி
ஆனாலும் போலீஸ்காரர் செல்வக்குமாரிடம் கூடுதல் பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார் வட்டி தொழில் செய்து வரும் அனிதா. அவசரத் தேவைக்கு பணம் தேவைப்பட்டால் மீண்டும் அனிதாவிடம் பணம் வாங்க வேண்டிய சூழல் வந்தாலும் வரும் என்பதால், அவர் கொடுத்து வந்த டார்ச்சரை முடிந்தவரை சமாளித்து வந்திருக்கிறார் காவலர் செல்வக்குமார்.

கந்துவட்டி கும்பல்
இதனிடையே கடன் வாங்கும் போது பத்திரத்தில் செல்வக்குமார் கையெழுத்திட்டுள்ளதை காட்டி ரூ.12 லட்சம் கொடுத்தால் விட்டுவிடுகிறேன், இல்லையென்றால் இதை காட்டி உன் வேலையை பறிப்பதுடன் மானம் மரியாதை எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டு விடுவேன் என வட்டியில் வயிறு வளர்த்த அனிதா கொக்கரித்திருக்கிறார். வட்டிக்கு பணம் வாங்கி கந்துவட்டி கும்பலிடம் சிக்கிக்கொண்ட காவலர் செல்வக்குமார் இதனாம் மனம் உடைந்து தற்கொலை முடிவை நாடியிருக்கிறார்.

வட்டிக்கு உயிர் இரை
கடந்த 1-ம் தேதியன்று பூச்சி மருந்து குடித்த நிலையில் சாலையில் சுருண்டு விழுந்த இவருக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் வட்டிக்கு தனது உயிரையே இரையாக்கியிருப்பது காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே உயிரிழந்த செல்வக்குமாரின் தந்தை முருகன் அளித்துள்ள புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications