கடலூரில் 2000 பேருக்கு மொத்தமாக விபூதி அடித்த நபர்.. ஒரே ஒரு பொய் சொல்லி பல கோடி சுருட்டல்
கடலூர்: கடலூர் அருகே தீபாவளி சீட்டு, தங்க நாணயம் சீட்டு, ஏலச் சீட்டு நடத்தி சுமார் 2,000 மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சீட்டு என்ற பெயரில் சுமார் 5 கோடி அளவுக்கு பணத்தை சுருட்டி அதனை ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்தது விசாரணையில் தெரியவந்தது.
கடலூர் மாவட்டம் கம்மியம்பேட்டை ரைஸ்மில் தெருவை சேர்ந்த நபர் செல்வநாயகம் (வயது 49). இவர் கடலூர் செம்மண்டலத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அவர் தீபாவளி சீட்டு, மாத ஏலச்சீட்டு, தங்க நாணய சிறுசேமிப்பு திட்டம் என பல சேமிப்பு திட்டங்களை நடத்தி வந்துள்ளார்.

இதில் பலரும் இணைந்துள்ளனர். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இவரது சிறு சேமிப்பு திட்டங்களில் சேர்ந்துள்ளனர். பண்ருட்டி, மஞ்சக்குப்பம், செம்மண்டலம், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் பலரும் ரூ.5 கோடிக்கு மேல் கொடுத்திருக்கிறார்கள். இந்த பணத்தை அவர்களிடம் கொடுக்காமல், ஆன்லைன் டிரேடிங் மூலம் ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்து இருக்கிறார்.
சீட்டு போட்டவர்கள் எல்லாரும் எப்போது தான் எங்கள் பணத்தை தருவீங்க என்று கேட்டு வந்துள்ளனர். அடுத்த மாதம், அடுத்த வாரம் எனக் கூறி வந்துள்ளார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல மக்களுக்கு இவர் மீது சந்தேகம் எழுந்தது. அக்கம்பக்கத்தில் விசாரித்ததில் 800க்கும் மேற்பட்டவர்களுக்கு செல்வ விநாயகம் பணத்தை கொடுக்காமல் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து தான் அவரிடம் பலரும் பணத்தை தருமாறு கூறியிருக்கிறார்கள்.
இதையடுத்து ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறிவிட்டு அலுவலகத்தை இழுத்து மூடிவிட்டு தப்பி ஓடினார். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் 2,000 பேரிடம் மோசடி செய்தது தெரியவந்தது. வெளிச்செம்மண்டலம் ரஞ்சனி பிரியா நகரில் வசிக்கும் அன்பரசு மூலம் சீட்டு கட்டிய நபர்களுக்கு 16 லட்சத்து 41 ஆயிரத்து 938 ரூபாயுடன் 8 கிராம் தங்க நாணயமும் என பலருக்கும் பணத்தை கொடுக்காமல் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஏமாற்றப்பட்டவர்கள் பலரும் ஒன்று கூடி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் மனு அளித்தனர். அதன்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து செல்வ விநாயகத்தை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார். வெளியூரில் இருந்து வீட்டுக்கு வந்த போது போலீசார் பிடித்து கைது செய்தனர். விசாரணையில் இவர் சுமார் 5 கோடிக்கும் மேல் பண மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து செல்வவிநாயகம் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications