திமுக கூட்டணியில் எந்த கட்சியும் வெளியேறாது.. பாஜகவின் கவலை அதுதான்.. திருமாவளவன் திட்டவட்டம்!
கடலூர்: திமுக கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கூட வெளியேறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுகவுடன் கூட்டணியில் இருந்து கொண்டே கூடுதல் தொகுதிகளை பெற முயற்சிப்போம் என்று கூறிய திருமாவளவன், திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்த முடியவில்லை என்ற கவலை பாஜகவிற்கு இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாகவே அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகியது. அதிமுக உடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டதில் இருந்தே, பாஜகவின் செயல்பாடுகள் தீவிரமாகி வருகின்றன. ஏற்கனவே மதுரைக்கு அமித் ஷா வந்த போதே பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அடுத்ததாக மதுரையில் முருகன் மாநாடு நடத்தப்பட உள்ளது.

இதனிடையே திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறி இருக்கிறார். குறிப்பாக விசிக தலைவர் திருமாவளவன் அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கேற்ப சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் கூடுதல் தொகுதிகளை கேட்போம் என்று கூறி இருக்கின்றனர்.
இதனால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து, தமிழ்நாடு பண்படுத்தப்பட்ட மண். முருக பக்தர்களாக இருந்தாலும், அவர்கள் மதச்சார்பற்றவர்களாக தான் இருப்பார்கள். தமிழ்நாட்டில் மதத்தின் பெயரால் வன்முறைகளை தூண்ட முடியாது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் கூடுதலாக இடம் கேட்போம். யாரும் 6 தொகுதிகள் போதும் என்று சொல்லப் போவதில்லை. அனைத்து கட்சிகளையும் அரவணைத்து செல்ல வேண்டும். அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசிக்கும் போது, வெற்றியை கருத்தில் கொண்டு சூழலை புரிந்து கொண்டு முடிவு எடுப்போம். நாங்கள் திமுக கூட்டணியில் தான் இருப்போம்.
திமுக கூட்டணியில் இருந்து கூடுதல் இடங்களை பெற முயற்சிப்போம். எல்.முருகனின் கருத்து திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்துவதற்காக சொல்லப்பட்டது. அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. திமுக கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கூட வெளியேறுவதற்கு வாய்ப்பே இல்லை. பாஜகவை பொறுத்தவரை திமுக கூட்டணியை சிதறடிக்க முடியவில்லை என்ற கவலை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணி காரணமாக திமுக ஆட்சிய் அமைக்கும் வாய்ப்பை இழந்தது. அதன்பின் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து திமுக கூட்டணி கட்சிகளுடன் சுமூகமான போக்கை கடைபிடித்து வருகிறது. அப்போது முதலே காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, முஸ்லீம் லீக், கொமதேக உள்ளிட்ட கட்சிகள் இணக்கமாக பயணித்து வருகின்றன. இதனால் திமுக சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணியை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications