என்.எல்.சி.க்கு எதிராக பாமக பிரம்மாண்ட போராட்டம்- கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மது கடைகள் மூடல்!
கடலூர்: விளைநிலங்களை அத்துமீறி கையகப்படுத்தும் என்.எல்.சி. நிர்வாகத்துக்கு எதிராக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்றது. நெய்வேலியில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்துக்காக சுமார் 12,000 ஏக்கர் விளைநிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ஆனால் உரிய நிவாரணம் வழங்காமல், உள்ளூர் மக்களுக்கே வேலைவாய்ப்பு என்பதை நிறைவேற்றாமல் என்.எல்.சி. நிர்வாகம், அத்துமீறி விளைநிலங்களை கையகப்படுத்துகிறது என்பது குற்றச்சாட்டு.

நெய்வேலி சேத்தியாதோப்பு அருகே உள்ள மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, கத்தாழை கிராமங்களிலும் பொதுமக்கள், நிலம் கையகப்படுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். ஆனால் இதனை பொருட்படுத்தாமல் மேல்வளையமாதேவி கிராமத்தில் என்.எல்.சி. நிர்வாகம் நிலம் கையகப்படுத்தியத்ற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. என்.எல்.சி. நிர்வாகத்தின் இந்தப் போக்கை கண்டித்து பாமக போராட்டம் அறிவித்தது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த அன்புமணி ராமதாஸ், எத்தகைய அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டாலும், வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப் படுவதை பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது. என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஒரு போதும் பின்வாங்காது. ஆதரவற்ற நிலையில் உள்ள கடலூர் மாவட்ட மக்களின் பாதுகாவலனாக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து களமிறங்கிப் போராடும். அதன் ஒரு கட்டமாக, என்.எல்.சி.க்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை உடனடியாக தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்; என்.எல்.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இந்தப் போராட்டத்திற்கு நானே தலைமையேற்கிறேன் என அறிவித்திருந்தார்.
இதனடிப்படையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நெய்வேலியில் இன்று பிரம்மாண்ட கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பாமகவினர் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்று என்.எல்.சி.க்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
இதனிடையே பாமகவின் இந்தப் போராட்டத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் மாலை 6 மணிவரை எந்த ஒரு இடத்திலும் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம் ஒரு உத்தரவை பிறப்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டாஸ்மாக் மதுபா ந கடைகளை மாலை 6 மணி வரை திறக்க தடை விதித்துள்ளது கடலூர் மாவட்ட நிர்வாகம். அசம்பாவிதங்கள், வன்முறை சம்பவங்களைத் தவிர்க்க டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications