என்எல்சியின் ராட்சத குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு.. போராட தயாராகும் மக்கள்?.. போலீஸ் குவிப்பு
கடலூர்: என்எல்சியின் ராட்சத குழாய் பதிக்கும் பணியை எதிர்த்து போராட்டம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்திருப்பதாக வந்த தகவலை அடுத்து அந்த பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்களை ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி நிறுவனமும் அழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கு பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதிலும் பாமக போராட்டங்களை நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களும் இதற்கு எதிராக போராடுகின்றனர். கடலூர் மாவட்டம் வளையமாதேவியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை அழித்து கான்கிரீட் போடும் பணிகள் நேற்று தொடங்கியது.
சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவோம் என்று கூறி, இரண்டாவது நாளாக பயிர்களை அழித்து நிலங்களைக் கைப்பற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 30-க்கு மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு வாய்க்கால் போடும் பணி நடைபெறுவதாக தகவலறிந்த பாமக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இதில் டயர்கள் கொளுத்தப்பட்டன. இதையடுத்து போலீஸார் பாமகவினரை கைது செய்தனர். இந்த நிலையில் நேற்று அழிக்கப்பட்ட நிலங்கள் குறித்த கணக்கெடுப்பு வட்டாட்சியர் தலைமையில் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கான்கிரீட் போடும் பணிகள் தொடங்கப்பட்டன. ராட்சத குழாய் பதிக்கும் பணிகளும் தொடங்கி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இநத் தகவலறிந்த கிராம மக்கள் போராட்டம் நடத்த போவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வளையமாதேவியில் 300 க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் பதற்றமான தெருக்களில் ஒவ்வொரு தெருவுக்கு 3 முதல் 10 போலீஸார் பாதுகாப்பு பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications