மத்திய அரசின் பேச்சு போட்டி.. நடப்பது கடலூரில்.. தமிழுக்கு அனுமதியில்லை.. ஹிந்திதான்.. வெடித்த தர்ணா
கடலூர்: கடலூரில் இளையோர் திருவிழாவில் நடக்கவுள்ள பேச்சு போட்டியில் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பேச அனுமதி என்ற அறிவிப்பை கண்டித்து பொது நல அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்ட நேரு யுவகேந்திரா சாா்பில் மத்திய அரசு மாவட்ட அளவிலான இளையோா் திருவிழா மற்றும் இந்தியா - 2047 கலந்துரையாடல், கருத்தரங்கம் ஆகியவை அக்.15ம் தேதி புனித வளனார் கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில், குடிமக்களின் கடமை உணா்வு என்னும் மையக் கருத்தை வலியுறுத்தி, பேச்சு, ஓவியம், கவிதை, புகைப்படம் எடுத்தல், கிராமிய குழு நடனம், கருத்தரங்கு, கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

கவிதை, பேச்சு போட்டிகள்
ஓவியம், கவிதை, புகைப்படப் போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுவோருக்கு முறையே ரூ. 1,000, ரூ. 750, ரூ. 500 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். பேச்சு போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முறையே ரூ. 5,000, ரூ. 2,000, ரூ. 1,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழும், கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெறுவோருக்கு கிராமியக் குழு நடனம் முறையே ரூ. 5,000, ரூ. 2,500, ரூ. 1,250 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

நேரு யுவகேந்திரா அறிவிப்பு
கருத்தரங்கு, கலந்துரையாடலில் முதல் 4 இடங்களில் வெற்றி பெறுவோருக்கு தலா ரூ. 1,500 பாராட்டுச் சான்றிதழும், போட்டிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழும் வழங்கப்படும். ஓவியம், கவிதை, புகைப்பட போட்டிகளில் முதலிடங்களில் வெற்றி பெறுவோா் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கவும், பேச்சுப் போட்டியில் முதலிடம் பெறுவோா் மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவா் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழ் புறக்கணிப்பு
ஆனால் இந்தப் பேச்சுப் போட்டியில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் நேரு யுவகேந்திரா அமைப்புக்கு எதிராக கோஷமிட்டு வருகின்றனர்.

சமூக அமைப்புகள் எச்சரிக்கை
இதுகுறித்து தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக கூறுகையில், நாளை நடைபெறும் பேச்சுப் போட்டியில் தமிழ் மொழியும் இணைக்கப்பட வேண்டும் அல்லது நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால், நாளை கல்லூரி வளாகத்தை முற்றுகையிடுவோம் என்று அறிவித்துள்ளனர். இது கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications