Ramadoss Curse: வயிறெரிந்து சொல்கிறேன்! அன்புமணியின் அரசியல் வாழ்க்கை முடிய போகிறது! ராமதாஸ் சபதம்
கடலூர்: நான் வயிறெரிந்து சொல்கிறேன், அன்புமணியின் அரசியல் வாழ்க்கை முடிய போகிறது என்றும் அவரால் பணம் கொடுத்துதான் கூட்டம் கூட்ட முடியும், நான் உருவாக்கிய கட்சியை அன்புமணி அபகரிக்க முயற்சிக்கிறார், அது நடக்காது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கடலூரில் நடந்த உள்ளரங்க ஆலோசனை கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், நான் வயிறெரிந்து சொல்கிறேன், அன்புமணியின் அரசியல் வாழ்க்கை முடிய போகிறது. அன்புமணியின் பா.ம.க. தலைவர் பதவிக்காலம் முடிந்துவிட்டது.
தேர்தல் ஆணையத்தை பணம் கொடுத்து அன்புமணி விலைக்கு வாங்கிவிட்டார். எனது உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது. எனது உரிமையை யாராலும் திருட முடியாது. இனி வெல்லப்போவது ராமதாஸ் தான். சட்டமன்றத்தில் பா.ம.க. பிரநிதித்துவம் குறைந்ததற்கு காரணம் அன்புமணியின் செயல்பாடுகளால் தான்.
அன்புமணியால் பணம் கொடுத்து தான் கூட்டம் கூட்ட முடியும். தான் உருவாக்கிய கட்சியை அன்புமணி அபகரிக்க முயற்சி. கட்சி விவகாரத்தில் அன்புமணி கூறுவது அனைத்தும் பொய்தான்.
எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னை போலவே இருப்பான்... ஆனால் எனக்கு நடந்த கொடுமை உங்களுக்கெல்லாம் தெரியும். என்னுடைய உயிரை தான் அன்புமணி பறிக்கவில்லை.. மீதி எல்லாவற்றையும் பறித்து விட்டார். என் உரிமை, நான் கட்சிக்காக சிந்திய வியர்வை உள்ளிட்டவைகளை பறித்துவிட்டார்.
எந்த நீதிமன்றத்திற்கு சென்றாலும் இந்த ராமதாஸை தோற்கடிக்க முடியாது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். சூழ்ச்சி செய்து தன்னை தலைவர் என அன்புமணி சொல்லிக் கொள்கிறார்.
அன்புமணியின் சூழ்ச்சியை ஒட்டுமொத்த தமிழகமும் புரிந்து கொண்டது. இந்த ராமதாஸை தோற்கடிக்க யாராலும் முடியாது. என்னிடம் இனியும் பறிக்க என்ன இருக்கிறது? வியர்வை சிந்தி, 45 ஆண்டுகாலம், 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று என் மக்களை சந்தித்து நம் சமூகத்தின் நிலையை சொல்லி வளர்த்த இந்த கட்சியை முழுவதுமாக அபகரிக்க எண்ணுகிறார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி திருவேற்காட்டில் நடந்த பொதுக் குழுவில் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. என்னுடன் இருந்தவர்களை எல்லாம் விலைக்கு வாங்குகிறார் அன்புமணி என ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாமக அன்புமணிக்கே சொந்தம் என இந்திய தேர்தல் ஆணையம் ராமதாஸுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதனால் ராமதாஸ், அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ்- அன்புமணி இடையே மோதல் காரணமாக அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கினார்.
இதையடுத்து புதிய செயல் தலைவராக மூத்த மகள் ஸ்ரீகாந்திமதி பரசுராமனையும் இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனையும் நியமித்து ராமதாஸ் உத்தரவிட்டார்.
இருவரும் மாறி மாறி நிர்வாகிகளை நியமிப்பதும் நீக்குவதுமாக இருந்தனர். இந்த நிலையில் கட்சி யாருக்கு, மாம்பழச் சின்னம் யாருக்கு என்பது குறித்தும் கடும் போட்டி எழுந்தது. இந்த நிலையில் பாமகவின் தலைவராக அன்புமணியே தொடர்வார் என அன்புமணி கூட்டிய பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டது.
இதையடுத்து பீகார் சட்டசபை தேர்தலை காட்டி, மாம்பழச் சின்னத்தை அன்புமணி பெற்றதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தேர்தல் அதிகாரிக்கு நவம்பர் 11 ஆம் தேதி ஒரு கடிதம் அனுப்பினார். அதில் அரசியலமைப்பின்படி தேர்வு செய்யப்பட்ட பாமகவின் தகுதிவாய்ந்த தலைவராக நான் 30-05-2025 முதல் பதவியேற்றேன். 16-07-1989 அன்று கட்சியை நிறுவிய கட்சியின் நிறுவனர் நான் என்பதால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 1 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களுடன் கட்சியை நடத்தி வருகிறேன்.
பல ஆண்டுகளாக கட்சியின் சின்னமாக மாம்பழம் சின்னத்தை வைத்திருந்ததால் தேர்தல் ஆணையம் மூலம் அங்கீகரிக்கப்பட்டு பல்வேறு நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டது. 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை 'மாம்பழம்' சின்னத்தை ஒதுக்குவதற்கான வேட்பாளர்களின் ஏ மற்றும் பி படிவங்களில் கையொப்பமிட எனக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இவ்வாறு ராமதாஸ் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையிலும் கட்சி அன்புமணிக்குத்தான் சொந்தம் என தேர்தல் ஆணையம் சொல்லிவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications