என்எல்சி.. 'போலீஸ் நடந்து கொண்டது சர்வாதிகார போக்கு'.. பாமகவிற்காக வெகுண்டெழுந்த வேல்முருகன்
கடலூர்: என்எல்சி நிறுவனத்தின் விரிவாக்கத்துக்காக விளை நிலங்களை கனரக வாகனங்களைக் கொண்டு கையகப்படுத்தும் என்எல்சி நிறுவனத்தின் போக்கை கண்டித்து பாமக நடத்திய போராட்டதை கலைக்க போலீசார் துப்பாக்கிக்சூடு, தடியடி நடத்தியதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிர்வாகம், விளை நிலங்களை அழித்து நிலம் கையகப்படுத்தியதைக் கண்டித்து இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகை போரட்டம் நடத்தப்பட்டு வந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.

அப்போது போராட்டக்காரர்களுக்கும், காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், வன்முறையாக வெடித்தது. போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதில் பலர் காயமடைந்தனர். போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது
இந்நிலையில் நடந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், "கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் என்.எல்.சி விரிவாக்கத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்து நெய்வேலியில் நடைபெற்ற போராட்டத்தின் நிறைவில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதும், அதைத்தொடர்ந்து பா.ம.கவினர் மீது நடத்தப்பட்ட தடியடி உள்ளிட்ட தாக்குதல்களும் கண்டிக்கத்தக்கவை. மண்ணைக் காக்க அறவழியில் நடத்தப்படும் போராட்டத்தை அடக்குமுறை மூலம் ஒடுக்க அரசும், காவல்துறையும் முயன்றால் அவர்களுக்கு தோல்வியே கிடைக்கும்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையல் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி வேல்முருகன் வெளியிட்ட ட்வீட் பதிவில், "என்எல்சி நிறுவனத்தின் விரிவாக்கத்துக்காக விளை நிலங்களை கனரக வாகனங்களைக் கொண்டு கையகப்படுத்தும் என்எல்சி நிறுவனத்தின் அடாவடி போக்கை கண்டித்து இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நெய்வேலில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தியும், தடியடி நடத்தியும் கண்ணீர் புகை வீசியும் மக்களை அப்புறப்படுத்திய தமிழக காவல்துறையின் சர்வாதிகாரப் போக்கை வன்மையாக கண்டிப்பதோடு கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.
என்எல்சிக்கு எதிரான பாமக போராட்டம் வன்முறையாக மாறி உள்ளதால், பேருந்துகள் கடலூர் மாவட்டத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. நெய்வேலி பகுதியில் பதற்றமான சூழல் காணப்படுகிறது. வன்முறையில் ஈடுபட்டதாக ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கொண்டுவன்முறை நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications