அதிகாரிகளா? ரவுடிகளா? கடப்பாரையுடன் வரி வசூல்! சாட்டையை சுழற்றிய கடலூர் கமிஷனர்.. பாய்ந்த ஆக்சன்!
கடலூர்: தமிழகம் முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் தீவிர வரி வசூல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் கடப்பாரையுடன் சென்று வரி கட்டாத வீடுகள் மற்றும் கட்டிடங்களை இடித்து விடுவதாக மிரட்டும் தொனியில் கடலூர் மாநகராட்சி ஊழியர்கள் செயல்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு மாநகராட்சி ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கின்றனர்.
தமிழகத்தின் அதிகாரம் மையம் சட்டமன்றம் என்றாலும் பகுதி மக்களின் கோரிக்கைகள் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவது உள்ளாட்சி அமைப்புகள் தான். அந்த வகையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என உள்ளாட்சி அமைப்புகள் பிரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகிறது.

குடிநீர், தெரு விளக்கு, கழிவுநீர் வாய்க்கால், குப்பைகளை அகற்றுதல், பூங்காக்கள், சாலை வசதிகள் உள்ளிட்ட பணிகள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தான் மேற்கொள்ளப்படுகிறது. அந்த அமைப்புகளின் அடிப்படை வரி வசூல் தான். அதன் மூலமே பொது மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர தண்ணீர் வரி, சொத்து வரி, வீட்டு வரி உள்ளிட்ட வரி வருவாய் மூலம் தான் ஊழியர்களின் சம்பளம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகிறது.
தற்போது தமிழக முழுவதும் வரி வசூல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மற்றும் ஊராட்சி பகுதிகளில் ஆணையர்கள் மற்றும் செயலர்கள் தீவிர வரி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். காலக்கெடு முடிந்தும் வரி கட்டாமல் இருந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் முறையாக வரி செலுத்துபவர்களுக்கு சலுகைகளும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடலூரில் வரிவசூல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடலூர் மாநகராட்சியில் பலர் முறையாக வரி வசூல் செய்யாமல் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்களிடம் இருந்து நிலுவைத் தொகை மற்றும் வரியை வசூல் செய்ய அதிகாரிகள் ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் வரி வசூலின் போது கடலூர் மாநகராட்சி ஊழியர்கள் நடந்து கொண்ட விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு சமூக வலைதளங்களிலும் கடும் எதிர்ப்பை பெற்றிருக்கிறது.
கடலூர் மாநகராட்சியில் மார்ச் 31ம் தேதி வரை வரி செலுத்த அவகாசம் இருக்கும் நிலையில் தற்போது வரி வசூலை தீவிரப்படுத்தி வருகின்றனர் மாநகராட்சி ஊழியர்கள். அதிர்ச்சி தரும் விதமாக வீடு வீடாக கடப்பாரையுடன் சென்று ஊழியர்கள் மிரட்டல் விடுவதாகவும் கூறப்படுகிறது. வரி செலுத்தவில்லை என்றால் வீட்டின் முன் இருக்கும் படிக்கட்டுகளை உடைப்பது, கழிவுநீர் தடுப்புகளை உடைப்பது, குப்பை கொட்டுவேன் என மிரட்டுகிறார்களாம்.
கோடிக்கணக்கில் வரி பாக்கி வைத்திருப்பவர்களை விட்டுவிட்டு முறையாக வரி செலுத்துபவர்களிடம் சென்றுமிரட்டுவது எப்படி என கேள்வி எழுப்புகின்றனர் கடலூர் பகுதி வாசிகள். மேலும் வரி கேட்டு ஊழியர்கள் மிரட்டியதை வீடியோ எடுத்து இணையத்திலும் வெளியிட்டனர். அதிர்ச்சி தரும் விதமாக வீட்டில் ஆண்கள் இல்லாத நிலையில் பெண் ஒருவரை உடனே வரி கட்டுங்க இல்லையென்றால் வீட்டை இடிப்போம் என மாநகராட்சி ஊழியர்கள் மிரட்டிய வீடியோ கடலூரை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அத்துமீறிய மாநகராட்சி ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது அடாவடியாக செயல்பட்ட ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார் கடலூர் மாநகராட்சி கமிஷனர். அதே நேரத்தில் உயர் அதிகாரிகளை தப்ப விட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே அடாவடியாக வரி வசூல் செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications