திமுக மேயர் Vs விசிக துணை மேயர்! மோதலுக்கு ஒரு முடிவே இல்லையா? தலைமைக்கு தான் தலைவலி!
கடலூர்: கடலூர் மாநகராட்சி திமுக மேயர் சுந்தரிக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த துணை மேயர் தாமரைச்செல்வனுக்கும் இடையே நீடித்து வந்த பனிப்போர் வெடித்து பூதாகரமாகி வருகிறது.
விசிக துணை மேயர் தாமரைச்செல்வனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் அளவுக்கு கடலூர் மாநகராட்சியில் திமுக, விசிக இடையே மோதல் முற்றிவிட்டது. இது இரண்டு கட்சிகளின் தலைமைக்கும் தர்மசங்கடத்தை கொடுத்திருப்பதோடு பெரும் தலைவலியையும் கொடுத்துள்ளது.

கடலூர் மாநகராட்சி மேயராக இருப்பவர் திமுகவை சேர்ந்த சுந்தரி. இவர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான ராஜாவின் மனைவி ஆவார். சுந்தரி மேயராக பொறுப்பேற்றது முதல் அவரது கணவர் ராஜாவும், மகன் பாலாஜியும் தான் ஆக்டிங் மேயராக வலம் வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இதனிடையே விசிகவை சேர்ந்த துணை மேயர் தாமரைச்செல்வன் மேயர் தரப்பு தன்னிச்சையாக எடுக்கும் முடிவுகள் சிலவற்றுக்கு முட்டுக்கட்டை போட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக துணை மேயர் தாமரைச்செல்வனுக்கு அரசு வாகனம் வழங்கவில்லை என்ற வருத்தமும் இருந்து வருகிறது.
மொத்தத்தில் திமுக மேயருக்கும், விசிக துணை மேயருக்கும் இடையே நீடித்து வந்த பனிபோர் வெடித்து இப்போது பஞ்சாயத்தை கூட்டியுள்ளது. சுந்தரியை மேயராக கொண்டு வருவதற்கு ஐயப்பன் எம்.எல்.ஏ. கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தான் மிகுந்த சிரமப்பட்டு சுந்தரியை மேயராக கொண்டு வந்தார்.

இப்போது துணை மேயருக்கு எதிரான மேயரின் அரசியல் அமைச்சருக்கும் தேவையற்ற தர்ம சங்கடத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஏற்கனவே விசிகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி கடும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் கடலூர் திமுக மேயர் சுந்தரியே அதற்கு வழிவகுத்து கொடுத்துவிடுவார் போல் நடப்பதை பார்த்தால் தெரிகிறது.
டைஃபாய்டு காய்ச்சலால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமாவளவனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கடலூர் மாநகராட்சி நிலவரம் பற்றியும் பேசியிருப்பார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications