வீங்கிப்போன கால்கள்.. மிகவும் களைப்படைந்த முகம்.. திருமாவளவனை பார்த்து கலங்கும் விசிகவினர்
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன், வீங்கிய காலுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் வீடியோவை விசிக நிர்வாகிகள் வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் விடிய விடிய வாக்கு எண்ணிக்கை நடந்த தொகுதி என்றால் அது சிதம்பரம் லோக்சபா தொகுதி தான்.. சிதம்பரம் தொகுதியில் கடந்த முறை பாமக அந்த அளவிற்கு கடும் சவால் அளித்தது. உதயசூரியன் சின்னத்தில் திருமாவளவன் போட்டியிடவில்லை... பானை சின்னத்தில் போட்டியிட்டார். அதனால் சின்னத்தை கொண்டு சேர்ப்பது ஒருபுறம் எனில், எதிர்க்கட்சிகளின் வலுவான வியூகம் காரணமாக திருமாவளவன் சென்ற முறை தோல்வியின் விளிம்பு வரை சென்று , பின்னர் வெற்றி பெற்றார்.

கடந்த 2019ம் ஆண்டு திமுக நிர்வாகிகளே திருமாளவனுக்கு போதிய ஒத்துழைப்பு தரவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.. அதுமட்டுமின்றி சமுதாய ரீதியாகவும் கடும் சவாலை திருமாளவன் சந்தித்தார். சில இடங்களுக்கு பிரச்சாரத்திற்கு கூட போகமுடியாத நிலை இருந்தது. ஆனால் இந்த முறை அப்படி இல்லை.. காரணம் முதல்வர் ஸ்டாலின்.. கடந்த முறை போல் இந்த முறை எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது.. கண்டிப்பாக திருமாவளவனை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்திடமும், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடமும் பொறுப்பை ஒப்படைத்துள்ளாராம்.
இதுதவிர தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனும் பிரச்சாரத்திற்கு பெரிய அளவில் உதவி வருகிறாராம்.. 2 அமைச்சர்களும் சிதம்பரத்திற்காக தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் கடந்த முறை போல் இந்த முறை, திருமாவளவன் பிரச்சாரத்திற்கு கடும் சவாலை சந்திக்கவில்லை என்கிறார்கள்..
திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தனித்தொகுதி நீண்ட காலமாக தனித்தொகுதியாகவே இருக்கிறது.. சிதம்பரம் தொகுதியை பொறுத்தவரை 3 மாவட்டங்களில் இருக்கிறது. கடலூர் மாவட்டத்தின் புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் சட்டப்பேரவைத் தொகுதிகளுடன், அரியலூர் மாவட்டத்தின் அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதிகளையும், பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் தொகுதியும் உள்ளடக்கியது தான் சிதம்பரம் லோக்சபா தொகுதி..
இங்கு திமுக, அதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கும் இங்கு வாக்கு வங்கி கணிமாக உள்ளது. சிதம்பரம் தொகுதியில் ஏற்கெனவே நான்கு முறை போட்டியிட்ட விசிக தலைவர் தொல்.திருமாவளவன், 2019-ம் ஆண்டு தேர்தலில் எம்.பி.யாக வெற்றி பெற்றார். மீண்டும் களத்தில் இறங்கி உள்ளார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் சந்திரகாசன் களம் இறங்கி உள்ளார். பாஜக சார்பில் கார்த்திகாயினி களம் இறங்கி உள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜான்சிராணி களம் இறங்கி உள்ளார்.
திருமாவளவன், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், ஜெயங்கொண்டம், குன்னம் ஆகிய ஆறு தொகுதிகளிலும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இரவு பகலாக ஒவ்வொரு கிராமம் கிராமாக திருமாவளவன் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். காரில் அமர்ந்தபடியும், உட்கார்ந்தபடியும் தீவிர பிரச்சாரம் செய்து வருவதால், திருமாவளவனின் கால்கள் இரண்டும் வீங்கி உள்ளது. ஆனால் வீங்கிய காலுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.. இது தொடர்பான வீடியோவை வன்னியரசு வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications