NLCக்கு எதிராக வேல்முருகன் போடும் பெரிய ப்ளான்! பா.ம.க.வை தொடர்ந்து த.வா.க.! கண்காணிக்கும் காவல்துறை
கடலூர்: பாட்டாளி மக்கள் கட்சியை தொடர்ந்து என்.எல்.சி.க்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்தை நடத்தும் திட்டத்தில் இருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்.
மலேசியா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாட்களுக்கு முன்னர் தமிழகம் திரும்பிய வேல்முருகன், நேராக கடலூர் சென்றதோடு கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளார்.

அதில் என்.எல்.சி.க்கு நாம் யார் என்பதை காட்ட வேண்டும் என்கிற வகையில் ஆலோசனைகள் நடைபெற்ற நிலையில், விளைந்த பயிர்களை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அழித்ததை கண்டித்து நெய்வேலியில் போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் அங்கம் வகித்தாலும் என்.எல்.சி. விவகாரத்தில் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் தான் இருக்கிறார் வேல்முருகன்.
இதனிடையே பாமக போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் அதனை அசம்பாவிதமின்றி கட்டுப்படுத்தவே காவல்துறைக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. இந்நிலையில் அடுத்தக்கட்டமாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் களமிறங்கவுள்ளதால் காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
வேல்முருகன் சற்று தடாலடியானவர் என்பதால் என்.எல்.சி.க்கு எதிரான த.வா.கா. போராட்டக் களம் இன்னும் வீரியமாக இருக்கும் எனக் கருதுகிறது காவல்துறை. அன்புமணியை விழுப்புரம் சரக டிஐஜி ஜியாவுல் ஹக் அமைதிப்படுத்தியதை போல் வேல்முருகனை அமைதிப்படுத்துவதற்கான முயற்சிகளும் காவல்துறை தரப்பில் முன்னெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம் நடத்தலாம் என்பதால் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்திற்கு இன்னும் கூடுதல் பாதுகாப்பு வழங்கவுள்ளது காவல்துறை.












Click it and Unblock the Notifications