விவசாய பம்பு செட்களில் மின் மீட்டர் பொருத்தும் பணி நிறுத்தம்.. அமைச்சர் தங்கமணி அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் விவசாய பம்பு செட்களில் மின் மீட்டர் பொருத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளது, இலவச மின்சாரம் எப்போதும் போல தொடரும் என்று தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாடு முழுக்க மின்சார துறையில் தனியார் மயமாதலை மத்திய நிதி துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. அதேபோல் நாடு முழுக்க ஒரே மாதிரியான கட்டண முறையை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் நாடு முழுக்க பல மாநிலங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்திலும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு இதை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. தமிழக முதல்வர் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தகவல்
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று சில விவசாய பம்பு செட்களில் மின் மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்றதாக தகவல் வந்தது. டெல்டா மாவட்டங்களில் விவசாய பம்பு செட்களில் மின் மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்றது என்று தகவல் வந்தது. விவசாய மின்சாரத்திற்கு கட்டணம் வசூலிக்கும் வகையில் இப்படி செய்ததாக தகவல் வந்தது. இது விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தங்கமணி பேட்டி என்ன
தமிழகத்தில் விவசாய பம்பு செட்களில் மின் மீட்டர் பொருத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. முதல்வர் இதில் கண்டிப்புடன் இருக்கிறார். அதனால் மின் மீட்டர் பொருத்தும் பணியை நிறுத்தி உள்ளோம்.

மின் மீட்டர் அமைப்பு
தமிழகம் முழுக்க எந்த பம்பு செட்களிலும் மின் மீட்டர் பொருத்த மாட்டோம். முதல்வர் உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். தட்கல் முறையில் சில விவசாயிகளின் பம்புகளில் மின் மீட்டர் பொருத்தப்பட்டது. தற்போது அதையும் வேண்டாம் என்று கூறி இருக்கிறோம். தமிழகத்தில் இலவச மின்சாரத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் மாநில அரசு மின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இலவசம் தொடரும்
கடலூர் மாவட்டத்தில் புதிய மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்தப்படுவதாக வெளியான தகவல் தவறானது. தமிழகத்தைப் பொருத்தவரை விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தொடர வேண்டும் என்பது தான் தமிழக அரசின் கொள்கை. இதனால் தமிழகத்தில் உள்ள எந்த விவசாயிகளும் இலவச மின்சாரம் குறித்து கவலைப்பட தேவையில்லை என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications