ரத்தம், சிசிடிவி, வாட்ஸ் ஆப்.. கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்.. இன்னும் விலகாத 7 "மர்மங்கள்"!
கடலூர்: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில்.. இந்த வழக்கில் 7 முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
Recommended Video
கள்ளக்குறிச்சியில் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி கடந்த ஜூலை 12ம் தேதி பலியானார். இவர் பலியான விவகாரம் தமிழ்நாட்டையே புரட்டி போட்டுள்ளது. அங்கு படித்த 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மாடியில் இருந்து விழுந்து பலியானார்.
இவர் தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறி உள்ளது. ஆனால் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை.

மாணவி மரணம்
அந்த மாணவி கடந்த ஜூலை 12ம் தேதி இரவு 10.30 மணிக்கு விழுந்து இருக்கலாம் என்று போலீசார் தரப்பு தெரிவித்துள்ளது. போஸ்ட்மார்டம் தரப்பு தகவலின் அடிப்படையில் அந்த மாணவி 10.30 மணிக்கு இறந்து இருக்கலாம் என்று தோராயமாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் அந்த மாணவியின் பிரேத பரிசோதனையில் இடம்பெற்று இருக்கும் சில தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் சில சந்தேகங்கள், கேள்விகள் எழுந்துள்ளன.

மர்மம் 1 - ரத்தம்
அதன்படி மாணவியின் உடையில் 4 இடங்களில் ரத்தம் இருந்துள்ளது. மேல் யூனிபார்ம் , கீழே பேண்ட், மேல் மற்றும் கீழ் உள்ளாடை என்று நான்கு இடங்களில் ரத்தம் இருந்துள்ளது. போஸ்ட்மார்டம் அறிக்கையில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது. இந்த ரத்தம் எப்படி வந்தது. அது கீழே விழுந்ததால் ஏற்பட்ட ரத்தமா அல்லது வேறு காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மர்மம் 2- சிசிடிவி எங்கே?
அதேபோல் மாணவியின் பெற்றோர் பள்ளி தரப்பிடம் சிசிடிவி கேட்டதற்கு பள்ளி நிர்வாகம் கொடுக்கவில்லை மாணவியின் பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால் 10.30 மணி வரை உள்ள சிசிடிவி காட்சிகளை மட்டுமே கொடுத்துள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். அதே சமயம் அது லேடிஸ் ஹாஸ்டல் என்பதால் அங்கு கேமரா இல்லை என்று போலீசார் தரப்பு தெரிவித்துள்ளனர். காலையில் மாணவி உடலை காவலர் தரையில் கண்டெடுக்கும் காட்சி மட்டும் இருப்பதாக போலீஸ் தரப்பு தெரிவிக்கிறது. பள்ளியில் உள்ள வேறு சிசிடிவி காட்சிகளில் இது எதுவும் பதிவாகவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மர்மம் 3 - சீருடை
மாணவியின் சீருடை அணிந்தபடியே பலியாகி உள்ளார். சீருடை அணிந்தபடியே அவர் இரவு வரை இருந்தது ஏன்? அப்படி நடந்தது என்ன? இரவு வரை அவர் உடை கூட மாற்றாமல் ஏன் இருந்தார் என்று அவரின் தயார் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இதுவும் பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. இது தொடர்பாகவும் விசாரணை செய்யப்பட்டுள்ளது.

மர்மம் 4 - கவனிக்கவில்லையா?
அந்த மாணவி இரவு 10.30 மணிக்கு இறந்ததாக கூறப்படுகிறது. காலை 5.30 மணிக்குத்தான் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவரை அந்த மாணவியை யாரும் தேடவில்லை. மாணவியின் ரூம் மேட் கூடவா தேடவில்லை? அல்லது உடலை யாருமே ஏன் கவனிக்கவில்லை? என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.

மர்மம் 5 - பள்ளி நிர்வாகம்
இன்னொரு பக்கம் பள்ளி நிர்வாகம் நாங்கள் போலீசிடம் அனைத்து ஆதாரங்களையும் கொடுத்து இருக்கிறோம். விசாரணைக்கு ஒத்துழைத்து உள்ளோம். மாணவியும் அவரின் தாயாரும் பேசியதை கண்டுபிடிக்க வேண்டும். அவர்கள் கடைசியாக பேசிய போன் கால்களை சோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதுவும் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. பள்ளி நிர்வாகம் சொல்வது உண்மை என்றால்.. மாணவியும், தாயாரும் போனில் பேசியது என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

மர்மம் 6 - சில சந்தேகங்கள்
இது போக அந்த பள்ளியில் சமீபத்தில் நடந்த சில கூட்டங்கள், பள்ளி நிர்வாகியின் அரசியல் சார்பு என்று வேறு சில விஷயங்கள் புயலை கிளப்பி உள்ளன. அதேபோல் அங்கிருந்து எடுக்கப்பட்ட வீடியோக்கள் என்று சில வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இவை உண்மையா? அங்கிருக்கும் ஆசிரியைகள் இரண்டு பேர் இப்போது கைதாகி உள்ளனர். இவர்கள் ஏன் கைது செய்யப்பட்டனர், என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மர்மம் 7 - கூட்டம் வந்தது எப்படி?
இது போக மிக முக்கியமாக நேற்று கலவரம் நடந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு எப்படி இவ்வளவு கூட்டம் வந்தது? யார் இதை ஏற்பாடு செய்தது? எப்படி கலவரத்திற்காக கட் அவுட் அடிக்கப்பட்டது? அருகில் இருந்த ஊர்களில் இருந்து ஆட்கள் கொண்டு வரப்பட்டனர்? இவர்கள் வாட்ஸ் ஆப் மூலம் திரட்டப்பட்டதாக கூறப்படுகிறது.. அப்படி என்றால் யார் கூட்டியது? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதை பற்றியும் விசாரிக்கும்படி போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications