பரிதவிக்கும் கடலூர்.. திடீரென திறந்துவிடப்பட்ட சாத்தனூர் அணை.. என்ன நடந்தது! அமைச்சர் தந்த விளக்கம்
கடலூர்: பெஞ்சல் புயல் காரணமாகக் கனமழை கொட்டியது. இந்த அதிதீவிர கனமழையால் வடதமிழகத்தில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்திலும் பாதிப்பு மிக மோசமாக இருக்கிறது. இதற்கிடையே கடலூரில் நேரில் ஆய்வு செய்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், திடீரென தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஏற்பட என்ன காரணம் என்பதை விளக்கினார்.
கடந்த சில நாட்களாகவே பெஞ்சல் புயல் தமிழ்நாட்டை ஒருவழி செய்துவிட்டது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் இந்த புயல் காரணமாகக் கனமழை கொட்டி தீர்த்துவிட்டது.

கொட்டிய மழை: சென்னையில் இதனால் பெரியளவில் பாதிப்புகள் இல்லை என்ற போதிலும் வடதமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாதிப்பு மோசமாகவே இருக்கிறது. கனமழை கொட்டி தீர்த்ததால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாகத் திருவண்ணாமலையில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், அதில் 7 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர்.
எப்போதும் புயலால் அதிகம் பாதிக்கப்படும் கடலூர் இந்த முறையும் பாதித்துள்ளது. அதிகனமழை பெய்ததால் சாத்தனூர் அணை நிரம்பிய நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் தென் பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டது. இதன் காரணமாகக் கடலூர் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார். அப்போது முதல்வர் ஸ்டாலினும் வீடியோ கால் மூலம் பொதுமக்களிடம் பாதிப்புகளைக் கேட்டறிந்தார்.
எம்ஆர்கே பன்னீர்செல்வம்: தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், "சாத்தனூர் அணையில் இருந்து கூடுதலாக நீர் திறந்துவிடப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடலூர் என்பது தென்பெண்ணை ஆறு கடலில் கலக்கும் பகுதியாகும். இதனால் இங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் உள்ள 19 கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 1.5 லட்சம் கன அடி தண்ணீர் கூடுதலாகத் திறந்துவிடப்பட்டதால் இது ஏற்பட்டுள்ளது.
தேவையான மீட்பு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரை அறிவுறுத்தியுள்ளோம்.. பாதிக்கப்பட்ட மக்களை மீட்டுப் பாதுகாப்பான இடங்களில் தக்கவைத்து வருகிறோம். அவர்களுக்கு உணவு உட்பட அடிப்படைத் தேவைகளை மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம். தீயணைப்புத் துறையினர், போலீசார், மாவட்ட நிர்வாகம் என அனைவர் மூலமாகவும் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மதில் சுவர்: திடீரென மழை கொட்டியதால் அணையின் கொள்ளளவைத் தாண்டி நீர் வந்துவிட்டது. இதனால் அணையில் இருந்து கூடுதல் நீரைத் திறந்துவிட்டுள்ளனர். இப்போது அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுவிட்டது. இருப்பினும், திறந்துவிடப்பட்ட கூடுதல் நீரால் இங்குக் கொஞ்சம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது எங்கெல்லாம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்து மீண்டும் இதுபோல சம்பவம் நடக்காமல் இருக்கத் தேவையான இடங்களில் மதில் சுவர் கட்டப்படும்.
அச்சப்பட வேண்டாம்: முதற்கட்ட கணக்கெடுப்பில் சுமார் ஒரு லட்சம் ஹெக்டர் அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்க வேளாண் துறை சார்பில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. மழை பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம் வழங்குவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார். மீண்டும் மழை வெள்ள பாதிப்பு ஏற்படுமா எனக் கேட்கிறீர்கள்.. அதற்கு சான்ஸ் இல்லை.. மழை குறைந்துவிட்டது. அதேபோல மழை நீரைக் கடல் உள்வாங்கத் தொடங்கிவிட்டதால் நீர் வேகமாக வடிந்து வருகிறது. இதனால் யாரும் பயப்பட வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications