3வதும் பெண்ணா? ஸ்கேனில் தெரிந்த பாலினம்.. கள்ளக்குறிச்சியில் கருக்கலைப்பு! உயிரிழந்த கடலூர் பெண்
கடலூர்: வேப்பூர் அருகே கிழக்குறிச்சி பகுதியில் கருக்கலைப்பு செய்த பெண் ஒருவர் ரத்தப்போக்கு அதிகரித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கீழக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். கூலித் தொழில் செய்து வந்த இவர் அமுதா (வயது 28) என்ற பெண்ணை திருமணம் செய்திருக்கிறார்.
திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளன. தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார் அமுதா.

மூன்றாவதும் பெண் குழந்தை
இந்த நிலையில் அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் மருந்தகத்தில் வயிற்றில் இருக்கும் குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்து இருக்கிறார். அதில் மூன்றாவதாகவும் பெண் குழந்தை இருப்பது தெரிய வந்துள்ளது. மூன்றாவது பெண் குழந்தை என்பதால் கருவை கலைக்க திட்டமிட்டு உள்ளனர்.

கருக்கலைப்பு
இதனை தொடர்ந்து அமுதாவுக்கு கடந்த 17 ஆம் தேதி அசகளத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் மெடிக்கலில் கருக்கலைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து அமுதா தன்னுடைய சொந்த ஊரான கீழ குறிச்சிக்கு திரும்பி வந்து இருக்கிறார். அப்போது அவருக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.

உயிரிழப்பு
இதனால் அமுதா சுயநினைவு இன்றி இருந்துள்ளார். இதனை அடுத்து குடும்பத்தினர் அவரை வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று இருக்கிறார். அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர், அமுதா வரும் வழியில் இறந்துவிட்டதாக கூறி உள்ளார். இது குறித்து வேப்பூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் விசாரணை
அதன் பேரில் வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த அமுதாவின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

2 வது சம்பவம்
இதே கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் ஏற்கனவே ஒரு பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டு இறந்த சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது கள்ளக்குறிச்சியில் கருக்கலைப்பு செய்து வந்த வேப்பூரை சேர்ந்த அமுதா என்ற பெண் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications