பட்டாவுக்கு துட்டு.. வேலைக்கு சேர்ந்து நாலே மாசம் தான் ஆகுது! கடலூர் விஏஓவுக்கு காத்திருந்த ட்விஸ்ட்
கடலூர்: தமிழகத்தில் அவ்வப்போது அதிரடியாக சோதனை நடத்தி லஞ்சம் பெரும் அதிகாரிகளை கைது செய்து வருகிறது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை. அந்த வகையில் கடலூரில் பணியில் சேர்ந்து நான்கே மாதங்களில் லஞ்சம் பெற்றதாக இளம் விஏஓ ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவருக்கு உடந்தையாக இருந்த அவரது உதவியாளரும் கைதாகி இருக்கிறார்.
லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்து என தமிழகத்தின் பல்வேறு அரசு அலுவலகங்களில் பலகைகளை பார்த்தாலும், லஞ்சம் வாங்குவதும் லஞ்சம் கொடுப்பதும் சட்டப்படி குற்றம் என விதவிதமாய் போர்டுகள் வைத்தாலும் லஞ்சத்தை ஒழிக்க முடியவில்லை.
பிறப்பு முதல் இறப்பு வரை லஞ்சம் கொடுத்தால் தான் எதையுமே சாதிக்க முடியும் என்ற நிலை இருக்கிறது. தனியார் நிறுவனங்களைக் கூட தற்போது லஞ்சம் தலை தூக்கி உள்ளது தான் கொடுமையிலும் கொடுமை. குறிப்பாக அரசின் வருவாய் துறை உள்ளிட்ட துறைகளை லஞ்சம் தலைவிரித்து ஆடுவது குறிப்பிடத்தக்கது.

லஞ்ச ஒழிப்பு
பிறப்பு, இறப்பு சான்றிதழ், வருவாய் சான்றிதழ், பட்டா மாறுதல் உள்ளிட்ட வருவாய் துறை சேவைகளை பெற ஆயிரக்கணக்கில் லஞ்சம் வாங்கப்படுகிறது/ இது குறித்து பல நேரங்களில் பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் ஒரு சில நேரங்களில் லஞ்சம் பெறும் அதிகாரிகள் கைது செய்யப்படுவதும் வாடிக்கையாக இருக்கிறது. அப்படித்தான் கடலூரில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதுவும் பணியில் சேர்ந்த நான்கே மாதங்களில் லஞ்சம் பெற்றதாக கிராம நிர்வாக அலுவலரும், அவரது உதவியாளரும் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
கடலூர் விஏஓ
பணத்திற்கு ஆசைப்பட்டு கஷ்டப்பட்டு வாங்கிய வேலையை இழந்திருக்கிறார் அந்த இளைஞர். தன் மீதான குற்றச்சாட்டு பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் அவரால் பணியாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் கையும் களவுமாக சிக்கி இருப்பதால் அவர் தப்பிப்பது கடினம் தான். கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே வாக்கூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் சதீஷ்குமார் என்பவர் விஏஓவாக பணியாற்றி வருகிறார்.
பட்டா மாற்றம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற அவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தான் பணியில் சேர்ந்து இருக்கிறார். அவருக்கு உதவியாளராக ரமேஷ் என்பவர் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த தேர்விஜயன் என்பவர் தனது தந்தையின் பெயரிலிருந்து தனது பெயருக்கு பட்டாவை மாற்றி தர வேண்டும் என விண்ணப்பித்திருக்கிறார். பட்டா மாறுதலுக்கு ஆறாயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என சதீஷ்குமார் கறார் காட்டி இருக்கிறார்.
லஞ்சம்
தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என தேர்விஜயன் எவ்வளவோ சொல்லியும் பணத்தை கொடுத்தால் தான் பட்டா மாறுதல் என கண்டிப்புடன் பேசி இருக்கிறார் சதீஷ். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பின்னர் 6000 ரூபாய் லஞ்சம் தருவதாக ஒப்புக் கொண்டதோடு, இது தொடர்பாக கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகார் செய்திருக்கிறார். சதீஷ்குமாரின் பின்னணி குறித்து விசாரித்த கடலூர் காவல்துறையினர் அவர் லஞ்சம் கேட்டது உண்மைதான் என்பதை உறுதி செய்த பின்னர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை தேர் விஜயிடம் கொடுத்து அனுப்பி உள்ளனர்.
லஞ்சம் கைது
தொடர்ந்து லஞ்சப் பணத்தை தனது உதவியாளர் ரமேஷ் மூலம் சதீஷ்குமார் வாங்கிய போது மறைந்திருந்த கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். உடனடியாக ரசாயனம் கொண்டு அவர் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. அதை புகைப்படம் வீடியோ ஆதாரங்களாக எடுத்துக் கொண்ட போலீசார் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை சோதனை செய்தனர். தொடர்ந்து இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications