விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் கடன்.. வங்கிகளுக்கு 1.5% வட்டி மானியம்! கேபினட் ஒப்புதல் - யாருக்கு பயன்?
டெல்லி: ரூ.3 லட்சம் வரை விவசாயிகளுக்கு கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு 1.5 சதவீத வட்டி மானியம் வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதன் மூலம் 2022 - 2023 நிதியாண்டு மற்றும் 2024 - 2025 விவசாயிகளுக்கு ரூ.3 லட்சத்துக்கும் குறைவான கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு 1.5 சதவீத வட்டி மானியம் அளிக்கப்படும். பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், சிறு குறு நிதி நிறுவனங்கள், கிராமபுற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், பிஏசிஎஸ் போன்ற கடன் வழங்கும் நிறுவனங்கள் இதில் அடங்கும்.
இந்த காலத்தில் சிறிய விவசாய கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு 1.5 சதவீத வட்டி மானியம் வழங்குவதற்காக ரூ.34,856 கோடி மத்திய அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும். விவசாய கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வட்டி மானியத்தை அதிகரிப்பதன் மூலமாக வேளாண் கடன் பெறும் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று மத்திய அரசு நம்புகிறது.
விவசாயி மகன் குடியரசுத் துணைத் தலைவரானது பெருமை - ஜெகதீப் தன்கரை நேரில் வாழ்த்திய பிரதமர் மோடி
மத்திய அரசு விளக்கம்
இதன் மூலமாக கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் நிதி ஆரோக்கியமும் சீராக இருக்கும் என அரசு கூறுகிறது. மேலும் வங்கிகளின் நிதிச்செலவு அதிகரிப்பதை உள்வாங்கிக் கொள்வதுடன் குறுகிய கால வேளாண் கடன்களை வழங்குவதற்கு இந்த வட்டி மானியம் ஊக்கப்படுத்தும் என்றும் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
யாருக்கெல்லாம் கடன்?
கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை தொழில், கோழி வளர்ப்பு மற்றும் மீன்பிடித்தல் போன்ற அனைத்து வகையான தொழில்களுக்கும் குறுகிய கால விவசாயக் கடன்கள் வழங்கப்படுகின்றன. எனவே இந்த வட்டி மானியத்தை உயர்த்தும் திட்டத்தின் மூலமாக வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
கிசான் கிரெடிட் கார்டு
விவசாயிகள் கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தினால், அவர்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்தில் குறுகிய கால விவசாயக் கடனும் கிடைக்கும். குறைவான செலவில் கஷ்டப்படாமல் விவசாயிகள் கடன் பெற வேண்டும் என்பதற்காக கிசான் கிரெடிட் கார்டு என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது.
வட்டி மானிய திட்டம்
குறைந்தபட்ச வட்டி விகிதத்தை விவசாயிகள் வங்கிகளுக்கு வழங்க வேண்டும் எனக்கூறி ஐ.எஸ்.எஸ். எனப்படும் வட்டி மானியத் திட்டத்தை தொடங்கியது. இதனை MISS அதாவது மாற்றி அமைக்கப்பட்ட வட்டி மானிய திட்டம் என்று பெயர் மாற்றியுள்ளதாகவும், இதன் மூலமாக விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரூ.3 லட்சம் கடன்
இந்த திட்டத்தின் மூலமாக விவசாயிகள், கால்நடை வளர்ப்பு, கோழிப் பண்ணை, பால் பண்ணை, மீன்பிடித் தொழில் செய்பவர்களுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் ஆண்டுக்கு 7 சதவீத வட்டியில் கிடைக்கும். கடனை விரைவாகவும், உரிய நேரத்திலும் திருப்பி வழங்கும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் 3 சதவீத மானியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறுகிறது.