அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு 1 மாதம் கெடு! டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் தர்ணா!
டெல்லி: 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை, தகுதி நீக்கம் என்ற வரிசையில் அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு ஒரு மாதம் கெடு விதிக்கப்பட்டு அடுத்த அதிர்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டு முதல் எண் 12, துக்ளக் லேனில் உள்ள அரசு பங்களாவில் குடியிருந்து வருகிறார் ராகுல்காந்தி.
19 ஆண்டுகாலம் ஒரே வீட்டில் வசித்து வரும் அவரை தகுதிநீக்கம் நடவடிக்கை காரணமாக திடீரென காலி செய்யச் சொல்லியிருக்கிறது மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம்.

ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2 நாட்களாக அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் எதிர்பாராத நிகழ்வுகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு ஒரு மாதம் கெடு விதித்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் புதிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. தகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் அரசு இல்லத்தை காலி செய்ய வேண்டும் என்பது மரபு.

19 ஆண்டுகள்
அந்த வகையில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் வசித்து வரும் எண் 12, துக்ளக் லேனில் உள்ள அரசு பங்களாவை ராகுல் காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே ராகுல் மீதான அடுத்தடுத்த நடவடிக்கைகளால் பொறுமையிழந்த காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். மகிளா காங்கிரஸ் தேசியச் செயலாளர் ஹசீனா சையத் தலைமையிலான டீம் மத்திய அரசுக்கு எதிராக கடந்த 2 நாட்களாக கடும் கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்
ராகுலுக்கு கொடுக்கப்பட்டுள்ள நெருக்கடிகளை கண்டித்து பல இடங்களிலும் இன்னும் காங்கிரஸ் கட்சியினர் பெரியளவில் போராட முன் வராத நிலையில் டெல்லியில் நடைபெற்றுள்ள தர்ணா போராட்டங்கள் கவனம் ஈர்த்துள்ளன. காங்கிரஸ் அலுவலகம் அமைந்துள்ள சாலையில் இந்த போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

நாடு தழுவிய
இதனிடையே வரும் திங்கள்கிழமை காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய அளவில் மத்திய அரசை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ் சார்பில் தனித் தனி போராட்டங்களும் முன்னெடுக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications