சிக்கிமில் ஒரு கட்சி மொத்தமாக கபளீகரம்... எஸ்டிஎப்பின் 10 எம்எல்ஏக்கள் கூண்டோடு பாஜகவில் ஐக்கியம்!
டெல்லி: சிக்கிம் ஜனநாயக முன்னணியின் 10 எம்.எல்.ஏக்கள் இன்று டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர். அக்கட்சியின் மேலும் 4 எம்.எல்.ஏக்களும் விரைவில் பாஜகவில் இணைய உள்ளனர்.
சிக்கிமில் கடந்த 25 ஆண்டுகாலமாக ஆளும் கட்சியாக இருந்து வந்தது சிக்கிம் ஜனநாயக முன்னணி. அக்கட்சியில் இருந்து வெளியேறிய மூத்த தலைவர் பிரேம்சிங் தமாங் 2013-ல் சிக்கிம் புரட்சிகர முன்னணி என்ற சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவை தொடங்கினார்.

இதையடுத்து சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி உடைய ஆரம்பித்தது. அண்மையில் லோக்சபா தேர்தலுடன் சிக்கிம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவுடன் பாஜக கூட்டணி அமைத்து மொத்தம் உள்ள 32 இடங்களில் போட்டியிட்டு 17 இடங்களைக் கைப்பற்றின. சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 இடங்களில் மட்டுமே வென்று 25 ஆண்டுகால ஆட்சியை இழந்தது.
இந்நிலையில் திடீரென சிக்கிம் ஜனநாயக முன்னணியின் 15 எம்.எல்.ஏக்களில் முன்னாள் முதல்வர் பவன்குமார் சாம்லிங் தவிர 14 எம்.எல்.ஏக்களும் கூண்டோடு பாஜகவுக்கு தாவுவது என முடிவு செய்தனர். இவர்களில் 10 எம்.எல்.ஏக்கள் இன்று டெல்லியில் பாஜகவின் பொதுச்ச்செயலாளர் ராம் மாதவ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
எஞ்சிய 4 எம்.எல்.ஏக்களும் விரைவில் பாஜகவில் இணைய உள்ளனர். ஆட்சியை கைப்பற்ற முடியாத மாநிலங்களில் கட்சியையே கைப்பற்றுவது என்கிற பாஜகவின் கொள்கைக்கு இன்னொரு கட்சி சிக்கியிருக்கிறது.












Click it and Unblock the Notifications