இக்கட்டான சூழ்நிலையிலும்.. இந்தியா வளர்ச்சி பாதையில் முன்னேறுகிறது.. நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரை
டெல்லி: இக்கட்டான சூழ்நிலையிலும் இந்தியா தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கிய நிலையில், அதன் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இவ்வாறு தெரிவித்தார்.

ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றியபோது திமுக, காங்கிரஸ் உட்பட 19 எதிர்க்கட்சிகள், அதை புறக்கணித்துவிட்டன. விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் உரையை புறக்கணித்தனர்.
இதனிடையே, ராம்நாத் கோவிந்த் தனது உரையில் பேசியதாவது:
கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இது ஒரு புதிய ஆண்டு & ஒரு புதிய தசாப்தம்.
நாம் சுதந்திரமடைந்த 75வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறோம். நாடாளுமன்ற அனைத்து உறுப்பினர்களும் நம்பிக்கையுடனும் இங்கு வந்துள்ளனர். எவ்வளவு கடினமான சவாலாக இருந்தாலும் நம்மை அது தடுத்து நிறுத்த முடியாது.
கொரானா வைரஸ் தாக்கத்தால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சுய சார்புடன் இருப்பதுதான் தற்போதைய இந்தியாவின் தாரக மந்திரமாக இருக்கிறது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் இந்த பெரிய தொற்று நோய் காலத்தில் பெரிய பலனை அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கட்டுக்குள் உள்ளது.
இந்த தொற்று நோய் காலகட்டத்தில் நாம் பல அன்புக்குரிய குடிமக்களை இழந்துள்ளோம். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த தொற்று நோய்க் காரணமாக இறந்தார். 6 எம்பிக்கள் உயிரிழந்தனர். அவர்கள் அனைவருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டில் கொரோனா வைரசில் இருந்து மீண்டு கொண்டிருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இவ்வாறு ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்












Click it and Unblock the Notifications