இந்தியாவில் 161 பேர் ஓமிக்ரானால் பாதிப்பு... 80% பேருக்கு அறிகுறிகள் இல்லை - மன்சுக் மாண்டவியா
நாடு முழுவதும் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ள 161 பேரில் 80 சதவிகிதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்தியாவில் ஓமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 161 பேரில் 80 சதவிகிதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 13 சதவிகிதம் பேருக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் 12 மாநிலங்களில் ஓமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. மிக அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ராஜ்யசபாவில் பேசிய போது, உலகில் பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. இதை கருத்தில் கொண்டு இந்தியாவில் புதிய வகை வைரஸ் பரவலை மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என்று கூறினார்.

ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஓமிக்ரான் வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதில் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றாலும் அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். அதன்பிறகு அவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

45 கோடியாக அதிகரிக்கும்
கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி வருகிறோம். தற்போது ஒரு மாதத்துக்கு 31 கோடி கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அடுத்த இரு மாதங்களில் இந்த எண்ணிக்கை 45 கோடியாக அதிகரிக்கும் என்று கூறினார்.

மக்களுக்கு தடுப்பூசி
நாடு முழுவதும் இதுவரை 88 சதவிகிதம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 58 சதவீதம் பேருக்கு 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பெரும்பான்மையான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளோம்.

80% பேருக்கு அறிகுறிகள் இல்லை
இந்தியாவில் இதுவரை 161 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 80 சதவிகிதம் பேருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. 13 சதவிகிதம் பேருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே தென்பட்டுள்ளன.

மன்சுக் மாண்டவியா
எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம். போதுமான மருந்துகள், ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளன. புதிதாக 48,000 வென்டிலேட்டர்கள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு
இதனிடையே தற்போது கிடைத்துள்ள திருத்தப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, இந்தியா முழுவதும் உள்ள ஓமிக்ரான் எண்ணிக்கை இப்போது 170 ஆக உள்ளது. மாநிலவாரியாக கணக்கெடுக்கப்பட்டதில் மகாராஷ்டிரா 54 பேருக்கும், டெல்லி 28 பேருக்கு, தெலுங்கானா 20 பேருக்கும், ராஜஸ்தானனில் 17 பேருக்கும் , கர்நாடகாவில் 18 பேருக்கும், கேரளாவில் 15 பேர், குஜராத் 11, உத்தரப் பிரதேசம் 2, மற்றும் ஆந்திரப் பிரதேசம், சண்டிகர், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 1 என பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications