ஜூலை 22ல் காவிரி ஆணையக் கூட்டம்.. மேகதாது குறித்து விவாதம்!
டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் வரும் ஜூலை 22ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளிக்குறிச்சி மாணவிக்கு நடந்தது என்ன? 5 பேரை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்ற போலீஸ்.. பரபர கேள்வி!
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணையைக் கட்ட கர்நாடகா அரசு தொடர்ந்து முயன்று வருகிறது.இந்த அணை மட்டும் கட்டப்பட்டால் தமிழ்நாட்டிலுள்ள பல லட்ச விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு கூறி வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் ஜூலை 22ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக வழக்கு தொடுத்துள்ளது.
காவிரி ஆணையம்
இதுகுறித்து அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்கே ஹல்தர், வரும் 23ம் தேதி நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவித்தார். இது தமிழக விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் தமிழக குழு
அதேபோல் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கூடாது என்று தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் கடிதம் எழுதினார். அதோடு இந்த கோரிக்கையை வலியுறுத்தி அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து கட்சி குழுவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு அனுப்பினார். இதனைத்தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து மேகதாது அணை குறித்து தமிழக குழு கோரிக்கைகளை வைத்தது.
தீவிரம் காட்டும் கர்நாடகா
இருந்தும் கர்நாடக முதலமைச்சர் பவசராஜ் பொம்மை மேகதாது அணை விவகாரத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். ஏற்கனவே இதுதொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து பேசியுள்ளார். அதுமட்டுமன்றி கர்நாடகா சட்டசபையில் மேகதாது அணையை கட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜூலை 22ல் கூட்டம்
இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் ஜூலை 22ம் தேதி நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் முதலில் ஜூன் 17ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. பின்னர் அது ஜூன் 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதன் பின்னர் 3வது முறையாகவும் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், ஜூலை 22ம் தேதி நடைபெற உள்ளது.