18-வது லோக்சபா கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது- தமிழக எம்பிக்கள் 39 பேரும் ஜூன் 25-ல் பதவியேற்பு!
டெல்லி: 18-வது லோக்சபா கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. லோக்சபாவில் நாளையும் நாளை மறுநாளும் புதிய எம்பிக்கள் பதவியேற்றுக் கொள்வர். லோக்சபாவில் தற்காலிக சபாநாயகர் பாஜகவைச் சேர்ந்த பர்த்ருஹரி மகதாப், புதிய எம்பிக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தல் ஜூன் 26-ந் தேதி நடைபெற உள்ளது.
18-வது லோக்சபா தேர்தலுக்குப் பின் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநயாகக் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி 3-வது முறையாகப் பொறுப்பேற்றுள்ளார்.

18-வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் முதல் 2 நாட்களும் புதிய எம்பிக்கள் பதவியேற்பர். 18-வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடரிலேயே சர்ச்சை வெடித்திருக்கிறது. புதிய எம்பிக்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் தற்காலிக சபாநாயகராக பாஜகவின் பர்த்ருஹரி மகதாப் நியமிக்கப்பட்டுள்ளதுதான் அந்த சர்ச்சை. 8 முறை எம்பியான கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸின் கொடிக்குன்னில் சுரேஷ், தலித் என்பதால் அவருக்கு தற்காலிக சபாநாயகர் பதவியை மத்திய பாஜக அரசு வழங்கவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.
மேலும் புதிய எம்பிக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதற்கு தற்காலிக சபாநாயகருக்கு உதவ கொடிக்குன்னில் சுரேஷ்(காங்கிரஸ்), டிஆர். பாலு(திமுக), ராதா மோகன் சிங்(பாஜக),பகன்சிங் குலஸ்தே(பாஜக) சுதிப் பந்தோபாத்யாய் (திரிணாமுல் காங்கிரஸ்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தற்காலிக சபாநாயகர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த குழுவில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் இடம் பெறாமல் புறக்கணிக்க இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து ஜூன் 26-ந் தேதி லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெறும். புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஜூன் 27-ந் தேதி நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுவார். அப்போது நீட், நெட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளை "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் முன்வைக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது. மேலும் ஜூன் 28-ல் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். இதன் பின்னர் ஜூலை 2-ந்தேதி லோக்சபாவில் 3-வது முறை பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி முதல் முறையாக உரையாற்றுவார்.
இதனிடையே லோக்சபாவில் நாளை மொத்தம் 280 எம்பிக்கள் பதவியேற்கின்றனர். மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 280 புதிய எம்.பிக்களுக்கு நாளை பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட இருக்கிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 39 எம்பிக்களும் நாளை மறுநாள் ஜூன் 25-ந் தேதி பதவியேற்க உள்ளனர். தமிழ்நாட்டு எம்பிக்களுக்கு ஜூன் 25-ந் தேதி பிற்பகல் 1 முதல் 3 மணி வரை நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications