“அந்த” 2 சட்டம்.. தப்பு பண்ணிட்டாரே ராகுல் காந்தி! 10 ஆண்டு கழித்து அவருக்கே எதிராக திரும்பிய கத்தி
டெல்லி: மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து தற்போது அவர் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். இதற்கு வழிவகுக்கும் சட்டம் என்ன? எதன் அடிப்படையில் அவர் நீக்கப்பட்டார் என்ற முழு விபரத்தை அறிவோம்.
கர்நாடகா மாநிலம் கோலாரில் கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்கு பின்னால் இருக்கும் "மோடி" என்ற துணை பெயரை குறிப்பிட்டு விமர்சித்தார்.
இதனை தொடர்ந்து குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது சமூகம் மீது ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக கூறி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

குற்றவாளி என தீர்ப்பு
இந்த வழக்கை நேற்று விசாரித்த சூரத் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா, ராகுல் காந்தி குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். இதனை அடுத்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த அவர், அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கி 30 நாட்கள் ஜாமீன் வழங்கினார்.

ராகுல் காந்தி பதவி பறிப்பு
இந்த நிலையில் இன்று காலை மக்களவை நிகழ்வில் ராகுல் காந்தி பங்கேற்ற நிலையில், அவர் எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலாளர் உத்பல் குமார் சிங் அறிவித்து உள்ளார். இதில் நாடாளுமன்ற இணை செயலாளர் பிசி திரிபாதி கையெழுத்து இருக்கிறார். அவர் மீதான நடவடிக்கைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூட்டணி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

உத்தரவு என்ன சொல்கிறது?
அந்த உத்தரவில், "மார்ச் 23 ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை தொடர்ந்து இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 102(1)(e) மற்றும் 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 8 இன் கீழ் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் படியே அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.

சட்ட விதிகள்
இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 102(1)(e) என்பது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட எந்த சட்டத்தின் கீழும் மத்திய அமைச்சரையோ, மாநில அமைச்சரையோ, எம்பி, எல்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வழி வகை செய்கிறது. 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 8 என்பது எம்பிக்கள் அல்லது எம்.எல்.ஏக்கள் ஒரு வழக்கில் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய முடியும்.

சட்டத்தை எதிர்த்தே ராகுல் காந்தி
கடந்த 2013 ஆம் ஆண்டு கீழ் நீதிமன்றங்களில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்ற எம்பி, எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்வதை எதிர்த்து மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், அப்போது அதை ராகுல் காந்தி கடுமையாக எதிர்த்ததால் அது கைவிடப்பட்டது. அதுமட்டும் இப்போது அமலில் இருந்திருந்தால் அவரின் பதவி பறிபோய் இருக்காது.












Click it and Unblock the Notifications