குஜராத் கலவர வழக்கு! மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த.. சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் ஜாமீனில் விடுதலை
டெல்லி: குஜராத் கலவர சம்பவத்தை முன்வைத்து பிரதமர் மோடிக்கு எதிராகச் சதித் திட்டம் தீட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டுக்கு ஜாமீன் கிடைத்த நிலையில், அவர் சிறையில் இருந்து விடுதலையாகி உள்ளார்,
கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள கோத்ராவில் ரயில் ஒன்று எரிக்கப்பட்டது. அதில் உள்ளே இருந்த கரசேவகர்கள் கொல்லப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து அங்கு மிகப் பெரிய அளவில் மத வன்முறை ஏற்பட்டது. இந்த மோசமான வன்முறையில் பல நூறு பேர் மோசமான முறையில் கொல்லப்பட்டனர்.

குஜராத் கலவரம்
குறிப்பிட்ட மதத்தினர் இதில் குறிவைத்துத் தாக்கப்பட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. அந்த சமயம் ஒட்டுமொத்த குஜராத்தே பற்றி எரிந்தது. இந்த வன்முறை சமயத்தில் காங்கிரஸ் எம்பி ஈசான் ஜாப்ரி உள்ளிட்ட 69 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வன்முறை தொடர்பாகப் பலர் கைது செய்யப்பட்டனர்.

வழக்கு
இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறி அன்றைய குஜராத் முதல்வரும் இன்றைய பிரதமருமான மோடி உட்பட 64 பேர் மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இருப்பினும், இது தொடர்பாக விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு, மோடி உள்ளிட்டோரை விடுதலை செய்தது. இதை எதிர்த்து ஈசான் ஜாப்ரி மனைவி ஜாகியா ஜாப்ரி, சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் உள்ளிட்டோர் சுப்ரிம் கோர்டில் வழக்கு தொடர்ந்தனர்.

டீஸ்டா செதல்வாட்
கடந்த ஜூன் 24ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த சுப்ரீம் கோர்ட், மோடி உள்ளிட்டோரை சிறப்புப் புலனாய்வுக் குழு விடுதலை செய்ததை உறுதி செய்தது. இந்த தீர்ப்பு வெளியான மறுநாளே குஜராத் வன்முறைச் சம்பவங்களில் மோடியை தொடர்புப்படுத்திச் சிக்க வைக்கச் சதித் திட்டம் தீட்டியதாக டீஸ்டா செதல்வாட் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். மேலும், முன்னாள் டிஜிபி ஶ்ரீகுமார், ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

ஜாமீன்
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், டீஸ்டா ஜாமீன் கோரி அகமதாபாத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதை அகமதாபாத் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், டீஸ்டா செதல்வாட், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சில நிபந்தனைகள் உடன் இடைக்கால ஜாமீன் வழங்கினார்.

விடுதலை
அதன்படி இன்று அவர் விடுதலை செய்யப்பட்டார். இதற்காகப் பிணை தொகையாக 25 ஆயிரம் ரூபாயை அவர் செலுத்தினார். அவர் வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து டீஸ்டா செதல்வாட் தனது பாஸ்போர்ட்டையும் நீதிமன்றத்தில் உத்தரவிட்டார். அனைத்து நடவடிக்கைகளும் முடிந்த பின்னர், அவர் சபர்மதி மத்தியச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications