உச்ச நீதிமன்றத்தையும் விடாத... கொரோனா 2ஆம் அலை.. வீட்டிலிருந்து வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள்
டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் பணிபுரியும் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதிகள் வீட்டிலிருந்தபடியே வழக்குகளை விசாரிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியிலும் கொரோனா பரவல் மிக மோசமாக உள்ளது. இதனால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற வளாகத்தில் பணிபுரியும் பாதிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்ற வளாகத்தில் பணிபுரியும் சுமார் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து உச்ச நீதிமன்ற வளாகம் தற்போது மூடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், நீதிபதிகள் குடியிருப்புகளில் இருந்தபடியே வழக்குகளை விசாரணை செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் நீதிமன்ற ஊழியர்களும் எழுத்தர்களுக்குமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதுவரை நீதிபதிகள் யாருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
முன்னதாக, கடந்த ஆண்டு கொரோனா பரவல் ஏற்பட்ட போதும், நீதிமன்றங்கள் மூடப்பட்டன. அதைத்தொடர்ந்து சில மாதங்களுக்கு வீடுகளில் இருந்தே நீதிபதிகள் வழக்கு விசாரணைகளை நடத்தினார்கள்.












Click it and Unblock the Notifications