டாய்லெட் போக கூட விடல.. "5 மணி நேரம் குளிரில் நிற்க வைத்து.." இந்தியர்களை அவமானப்படுத்திய ஜார்ஜியா அதிகாரிகள்! ஷாக்
டெல்லி: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜார்ஜியா நாட்டிற்குச் சுற்றுலா சென்ற இந்தியப் பயணிகள் மோசமாக நடத்தப்பட்டிருக்கின்றனர். சுமார் 5 மணி நேரம் வரை அவர்களுக்கு உணவு மற்றும் கழிப்பறையைப் பயன்படுத்தக் கூட அனுமதி தராமல் ஜார்ஜியா அதிகாரிகள் காக்க வைத்துள்ளனர். கடும் குளிர் இருந்தபோதும் நடைபாதையிலேயே காக்கவைத்து அவமானப்படுத்தியதாக இந்தியப் பெண் பயணி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இப்போது இந்தியர்கள் பலரும் பல்வேறு நாடுகளுக்கும் சுற்றிப் பார்க்கச் செல்கிறார்கள். அப்படி வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பெரும்பாலான இடங்களில் வெளிநாட்டினர் எந்தவொரு சிக்கலையும் எதிர்கொள்வதில்லை. ஆனால், சில இடங்களில் இந்தியர்கள் மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள். அப்படியொரு சம்பவம் தான் இப்போது ஜார்ஜியா நாட்டில் நடந்துள்ளது.

56 இந்தியப் பயணிகள் அவதி
ஜார்ஜியா நாட்டிற்குச் சென்ற 56 இந்தியப் பயணிகளை அந்நாட்டு அதிகாரிகள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதாகப் பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். அர்மீனியாவிலிருந்து ஜார்ஜியாவுக்குள் நுழைய முயன்றபோது இந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருவி படேல் என்ற பெண்தான் இந்தத் தகவல்களைத் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். உரிய இ-விசாக்கள் மற்றும் ஆவணங்கள் இருந்தபோதிலும், சதாக்லோ எல்லையில் அந்நாட்டு அதிகாரிகள் இந்தியப் பயணிகளை அவமானப்படுத்தியதாகவும் நீண்ட நேரம் தடுத்து வைத்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
5 மணி நேரம் உணவு கூட இல்லை
அங்குக் கடும் குளிர் நிலவிய போதிலும், சுமார் 5 மணி நேரம் வரை கழிப்பறை பயன்படுத்தக் கூட அனுமதிக்கவில்லை என்றும் உணவு கூட தராமல் தங்களைக் காத்திருக்க வைத்தாக அவர் கூறியிருக்கிறார். மேலும், ஜார்ஜியா அதிகாரிகள் திடீரென வந்து தங்கள் பாஸ்போர்ட்களை பிடுங்கி வைத்துக் கொண்டதாகவும் சுமார் 2 மணி நேரம் தங்களிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் கால்நடைகளைப் போல நடைபாதையில் அமர வைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அந்தப் பெண் மேலும் கூறுகையில், "அவர்கள் எங்களைக் குற்றவாளிகள் போல நடத்தினார்கள். எங்களைக் குற்றவாளிகள் போல வீடியோவும் எடுத்தனர். அதேநேரம் நாங்கள் வீடியோ எடுக்க முயன்றபோது அதை அனுமதிக்கவில்லை. மேலும், அதிகாரிகள் ஆவணங்களைச் சரிபார்க்கக்கூட இல்லை. எங்களிடம் இருக்கும் விசாக்கள் தவறானவை எனச் சொல்லி, பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டனர்" என்று கூறியிருக்கிறார்.
நடவடிக்கை தேவை
துருவி படேல் இந்த போஸ்ட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோரை டேக் செய்து, இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தச் சம்பவம் அர்மீனியா மற்றும் ஜார்ஜியா இடையேயான முக்கிய எல்லையான சதாக்லோவில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
நெட்டிசன்கள் கருத்து
துருவி படேலின் இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டானது. பலரும் இது தொடர்பாகப் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகிறார்கள். நெட்டிசன்கள் பலரும், ஜார்ஜியா எல்லையில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல்முறை இல்லை என்றும் கடந்த சில ஆண்டுகளாகவே இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஜார்ஜியா நாட்டில் செல்லும் இந்தியர்கள் தொடர்ச்சியாக இதுபோலவே நடத்தப்படுவதாகச் சிலர் கூறியுள்ளனர்.
இன்னொரு யூசர், ஜார்ஜியாவில் இது தொடர்கதையாக இருக்கிறது என்றால் இந்தியர்கள் ஏன் அங்குச் செல்ல வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ஜார்ஜியா அரசே நிறவெறி கொள்கையுடன் நடந்து கொள்வதே இதற்குக் காரணம் என மற்றொரு கருத்தைக் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications