கொரோனா 2-வது அலையில் நாடு முழுவதும் 594 மருத்துவர்கள் மரணம்- இந்திய மருத்துவர் சங்கம்
டெல்லி: கொரோனா 2-ம் அலை பரவலில் நாடு முழுவதும் மொத்தம் 594 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா அலை பரவலைக் கட்டுப்படுத்துவதில் முன்களப் போராளிகளாக களத்தில் நிற்பவர்கள் மருத்துவர்கள். தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

1300 மருத்துவர்கள் மரணம்
இப்படி சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், கொரோனா வைரஸ் தாக்கி மரணமடைவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் இந்த தேசத்தின் மருத்துவர்கள் தங்களை மகத்தான தியாகப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர். நாட்டில் இதுவரை சுமார் 1,300 மருத்துவர்கள் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

594 மருத்துவர்கள் உயிரிழப்பு
தற்போதைய கொரோனா 2-வது அலையில் மட்டும் 594 மருத்துவர்கள் பலியாகி உள்ளனர். இதில் டெல்லியில்தான் மிக அதிகபட்சமாக 107 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

பீகார், உ.பி.யில் அதிகம்
டெல்லியைத் தொடர்ந்து பீகாரில் 96, உத்தரப்பிரதேசத்தில் 67 மருத்துவர்களை கொரோனா காவு கொண்டிருக்கிறது. ராஜஸ்தானில் 43, ஆந்திராவில் 32, குஜராத்தில் 31 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகம்- 21 மருத்துவர்கள் மரணம்
தமிழகத்தில் இதுவரை 21 மருத்துவர்களும் ஒடிஷாவில் 22 மருத்துவர்களும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று உச்சத்தைத் தொட்ட மகாராஷ்டிராவில் மொத்தம் 17 மருத்துவர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேற்கு வங்கத்தில் 25 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர்.

ராம்தேவ் சர்ச்சை பேச்சு
நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலமும் கொரோனாவுக்கு மருத்துவர்களை இழந்து கொண்டிருக்கிறது. ஆனால் யோகா குரு என அழைத்து கொள்ளும் பாபா ராம்தேவ், அலோபதி என்பது முட்டாள்தனமான அறிவியல்; கொரோனா தடுப்பூசிகள் போட்டதாலேயே, அலோபதி மருத்துவ முறையாலே 10,000 மருத்துவர்கள்; பல லட்சம் பொதுமக்கள் உயிரிழந்தனர் என கூறியிருந்தார். இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ராம்தேவ் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை கோரி மருத்துவர்கள் நேற்று கறுப்பு பேட்ஜ் அணிந்தும் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications