ஜார்க்கண்ட்: அமைச்சர் பதவி இல்லையா? 8 காங். எம்எல்ஏக்கள் பெட்டி, படுக்கைகளுடன் டெல்லியில் 'டேரா'!
டெல்லி: ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் தலைமையிலான புதிய அரசில் அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கட்சி தலைமையுடன் முட்டி மோத டெல்யில் முகாமிட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்)- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அம்மாநில புதிய முதல்வராக சாம்பாய் சோரன் பதவியேற்றார். காங்கிரஸ் ஆதரவுடன் சாம்பய் சோரன் பதவியேற்று, நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் கூட்டணி அரசுக்கு ஜேஎம்எம் கட்சியின் 29 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் 17 எம்.எல்.ஏக்கள் மற்றும் ஆர்ஜேடியின் 1 எம்.எல்.ஏ என மொத்தம் 47 பேர் ஆதரவு உள்ளது.

தற்போது ஜார்க்கண்ட் புதிய முதல்வர் சாம்பாய் சோரன் அமைச்சரவையில் தங்களுக்கு பதவி வேண்டும் என 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதனையடுத்து ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜேஷ் தாக்கூர், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதனையடுத்து ராஜேஷ் தாக்கூர் மற்றும் 8 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சனிக்கிழமையன்று டெல்லி புறப்பட்டுச் சென்று முகாமிட்டுள்ளனர். இது தொடர்பாக ராஜேஷ் தாக்கூர் கூறுகையில், ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன், காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து பேச உள்ளார். இதனைத் தொடர்ந்து கார்கே நானும் 8 எம்.எல்.ஏக்களும் சந்தித்து பேச உள்ளோம். 8 எம்.எல்.ஏக்களும் தங்களது விருப்பத்தை கட்சி தலைமையிடம் தெரிவிக்க உள்ளனர். அதேநேரத்தில் 8 எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர் எனவும் கூற முடியாது என்றார்.

டெல்லியில் முகாமிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ ராஜேஷ் கச்சாப் கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை சந்திக்க டெல்லிக்கு வருகை தந்துள்ளோம். எங்களுடைய பிரச்சனைகளை கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பொதுச்செயலாளர் கேசி வேணுகோபாலை சந்தித்து தெரிவிப்போம் என்றார்.
மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. இர்ஃபான் அன்சாரியோ, நாங்கள் புதிய அமைச்சர்கள் சிலரை விரும்பவில்லை. இதனை கட்சித் தலைமையிடம் தெரிவிக்க டெல்லி வந்துள்ளோம். சாம்பாய் சோரன் அமைச்சரவையில் புது முகங்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் இருந்த போது மக்களிடம் அதிருப்தியை உருவாக்கியவர்களே தற்போதும் அமைச்சராக நீடிப்பது ஏற்புடையது அல்ல. இதனைத்தான் கட்சி தலைமையிடம் தெரிவிக்க உள்ளோம் என்றார். அத்துடன் மேலும் சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் டெல்லிக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது ஜார்க்கண்ட் மாநில ஜேஎம்எம்-காங்கிரஸ் ஆட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆனால் டெல்லி காங்கிரஸ் மேலிட வட்டாரங்களோ, ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் 4 அமைச்சர்களை நீக்குவது சரியாக இருக்காது. அது சட்டசபை தேர்தலில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். அதனால்தான் ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் இடம் பெற்றவர்களையே சாம்பாய் சோரன் அமைச்சரவையிலும் நீடிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. சட்டசபை தேர்தல் நேரத்தில் எந்த ஒரு அதிருப்தியும் வந்துவிடக் கூடாது என்பதில்தான் மேலிடம் உறுதியாக உள்ளது என்கின்றன.












Click it and Unblock the Notifications