டெல்லியில் 80% கட்டிடங்கள் ஆக்கிரமிப்புதான்.. அனைத்தையும் புல்டோசரில் இடிப்பீர்களா? - கெஜ்ரிவால் நச்
டெல்லி: ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்று சொல்லி பாஜகவின் மாநகராட்சி நிர்வாகங்கள் புல்டோசரை கொண்டு வீடுகள், கடைகளை இடித்து தள்ளுவது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய பேரழிவு என அம்மாநில முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ஜஹாங்கிர்புரியில் அனுமன் சேனா ஊர்வலம் சென்ற இந்துத்துவ அமைப்பினர் அவ்வழியே உள்ள மசூதி அருகே தகராறில் ஈடுபட்டதால் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்து கலவரமாக மாறியது.
இந்த நிலையில் கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் மீதும் அப்பகுதி இஸ்லாமியர்கள் மீதும் டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.
ஹிட்லர் கூட வேலை வாய்ப்பை கொடுத்தார்... மோடி என்ன செய்தார்? - அர்விந்த் கெஜ்ரிவால் கேள்வி
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி வீடுகள் இடிப்பு
இதனிடையே ஜஹாங்கிர்புரியில் இஸ்லாமியர்களின் வீடுகள் ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டுள்ளதாக கூறி அவற்றை இடிக்க மாநகராட்சி உத்தரவிட்டது. அதன்பேரில் உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசத்தை போல் புல்டோசரில் இஸ்லாமியர்களின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலைகள் எழுந்தன.
ஷாஹின் பாக்
இதனை தொடர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களின் மையமாக அறியப்பட்ட டெல்லி ஷாஹின் பாக் பகுதிகளிலும் வீடுகள் புல்டோசர்களை கொண்டு தகர்க்கப்பட்டன. பாஜக நிர்வகிக்கும் மாநகராட்சி நிர்வாகங்கள் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் எனக்கூறி கட்டிடங்களை இடிக்கும் நடவடிக்கை டெல்லி முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது உச்சநீதிமன்ற தலையீடு காரணமாக இந்த பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன.
கெஜ்ரிவால் கண்டனம்
இதுகுறித்து டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், வீடுகளை இடிக்க புல்டோசர்களை பயன்படுத்துவது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய பேரழிவு எனத் தெரிவித்துள்ளார். "டெல்லியை சேர்ந்த மக்களின் வீடுகளையும் கடைகளையும் பாஜக இடித்து தள்ளும் விதம் முறையற்றது. இங்கு இருக்கும் 63 லட்சம் மக்களுடைய வீடுகள் மற்றும் கடைகளின் மீது புல்டோசரை ஏற்ற முடியும்.
80% டெல்லி ஆக்கிரமிப்புதான்
சொல்லப்போனால் டெல்லியில் 80 சதவீதத்திற்கும் அதிகமான கட்டிடங்கள் ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டவைதான். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக சொல்லி 80 சதவீத டெல்லியையும் அழித்துவிடுவீர்களா? அதுமட்டுமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடைமுறையும் சரியில்லை. ஆவணங்கள், உத்தரவுகள் எதையும் காட்டாமல் எந்த வாய்ப்புகளும் வழங்காமல், வெறும் புல்டோசரை கொண்டு வந்து இடித்து தள்ளுகிறார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.