கொரோனா தடுப்பூசி போட்ட 946 பேர் மரணம் ராஜ்யசபாவில் மத்திய அரசு தகவல்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 946 பேர் மரணம் அடைந்துள்ளதாக ராஜ்யசபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 946 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் 1,019 பேர் பல்வேறு பாதிப்புகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,439 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 4,656 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,46,56,822 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 9,525 பேர் மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,40,89,137 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் மேலும் 195 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,73,952 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை கடந்த 555 நாட்களில் இல்லாத அளவில் 93,733 ஆக குறைந்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று 73,62,000 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டது. இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 129.54 கோடியாக அதிகரித்துள்ளது. ஓமிக்ரான் பரவலும் அதிகரித்து வருவதால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என்று மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
அச்சம் காரணமாகவே இன்னமும் பலர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருக்கின்றன. இந்த நிலையில் தடுப்பூசி செலுத்தியவர்களில் 946 பேர் மரணமடைந்துள்ளதாக மத்திய அரசு ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்,
நாட்டில் 3 நிறுவனங்களின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 946 பேர் இறந்திருக்கின்றனர். தடுப்பூசி செலுத்திக்கொண்டபின் பல்வேறு பாதிப்புகள் காரணமாக ஆயிரத்து 19 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
இதில் 89 மரணங்களும் எவ்வாறு நிகழ்ந்தவை என பிரிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, 4 மரணங்கள் தடுப்பூசி சார்ந்தவை, 58 தற்செயலானவை, 16 வரையறுக்க முடியாதவை மற்றும் 11 வகைப்படுத்த முடியாதவை ஆகும்.
Recommended Video
கடந்த மாதம் 30ஆந் தேதி நிலவரப்படி, தடுப்பூசி போட்டுக்கொண்ட 49,819 பேருக்கு பல்வேறுவித பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அவை அனைத்தும் தடுப்பூசி செலுத்தியதால் ஏற்பட்டவை என்று கூற முடியாது. அதேநேரம், மொத்த பாதிப்புகளில் 47,691 லேசானவை, 163 தீவிரமானவை, 1965 மோசமானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.