டெல்லி கலவர வழக்கு: 'குறுகிய மனப்பான்மை உள்ளவர்கள்'.. போலீசை விட்டு விளாசிய நீதிமன்றம்!
டெல்லி: டெல்லி போலீசாரின் குறுகிய மனப்பான்மையே டெல்லி கலவர வழக்கு விசாரணைக்கு தாமதம் என்று நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 2019-ம் ஆண்டு நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்தன.
நாமக்கல், தஞ்சை, கரூரை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்திலும் 4 மாணவர்களுக்கு கொரோனா
தலைநகர் டெல்லியில் இந்த போராட்டம் தீவிரமாக நடந்தது. டெல்லியின் பல்வேறு பகுதிகளில் 100 நாட்களை கடந்து நடந்தது. பல இடங்களில் அமைதியாக நடந்த போராட்டத்தில் 2019-ம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி கலவரம் வெடித்தது.
டெல்லி கலவரம்
பல இடங்களில் கடைகள், வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த கலவரத்தில் மொத்தம் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் என்றும் அவர்களின் கடைகள், வீடுகளை குறி வைத்து மட்டுமே பெரும்பாலான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கலவரத்தால் வீடுகளை இழந்த பலர் தங்க இடம் இல்லாமல் தவித்தனர்.
போலீசார் விசாரணை
இந்த கலவரம் தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கலவரம் தொடர்பாக 751 எப்.ஐ.ஆர்.களை டெல்லி போலீசார் பதிவு செய்துள்ளனர். மேலும் இது தொடர்பான பல்வேறு வழக்குகளும் டெல்லி மாவட்ட நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இதில் இரண்டு வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நடந்தது.
மாஜிஸ்திரேட் கண்டனம்
இதனை விசாரித்த தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் அருண் குமார் கார்க், 'போலீசாரின் குறுகிய மனப்பான்மைதான் இந்த வழக்கு முடிய மிக தாமதம் ஏற்படுகிறது. டெல்லி போலீசார் தங்கள் கடமைகளில் தோல்வி அடைந்துள்ளனர். பொறுப்பை ஏற்றுக்கொள்வதை தவிர்த்து வருகின்றனர்'' என்று சரமாரியாக குற்றம்சாட்டினார். இந்த வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி போலீஸ் கமிஷனருக்கு தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் அருண் குமார் கார்க் உத்தரவிட்டார்.
தெளிவாக தெரிகிறது
இந்த வழக்கு தொடர்பாக ஒரு வாரத்திற்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு போலீஸ் கமிஷனருக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இந்த இரண்டு வழக்கு தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் ஏற்கனவே தாக்கல் செய்த பதிவில் விசாரணையின் நிலை அல்லது தற்போதைய வழக்கின் மேலதிக நடவடிக்கைகள் பற்றி தெரியாதது போல் முற்றிலும் தவிர்க்கப்படுவது தெளிவாக தெரிகிறது என்று நீதிமன்றம் குற்றம்சாட்டியது.