டெல்லி மேயர் பதவி தேர்தல்- ஆம் ஆத்மி, பாஜக கவுன்சிலர்களிடையே கடும் மோதலால் பதற்றம்!
டெல்லி: நாட்டின் தலைநகரான டெல்லி மாநகராட்சியின் மேயர் பதவிக்கான தேர்தல் பாஜக, ஆம் ஆத்மி கவுன்சிலர்களிடையேயான கடும் மோதலையடுத்து ஒத்திவைக்கப்பட்டது.
250 வார்டு கவுன்சிலர்களைக் கொண்டது டெல்லி மாநகராட்சி. இந்த மாநகராட்சிக்கான தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 வார்டுகளைக் கைப்பற்றியது. பாஜகவுக்கு 104 கவுன்சிலர்கள்தான் கிடைத்தனர். காங்கிரஸுக்கு 9 இடங்கள் மட்டும் கிடைத்தன. இதன் மூலம் டெல்லி மாநகராட்சியை 15 ஆண்டுகளாக தம் வசம் வைத்திருந்த பாஜகவின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று டெல்லி மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் ஷெல்லி ஓபெராய், ஆஷூ தாக்குர் ஆகியோர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஷெல்லிதான் பிரதான மேயர் வேட்பாளர். பாஜக சார்பாக ரேகா குப்தா மேயர் வேட்பாளர். ஆம் ஆத்மியின் துணை மேயர் வேட்பாளர்களாக ஜலாஜ் குமார், ஆலே முகம்மது இக்பால் ஆகியோர் களத்தில் உள்ளனர். பாஜக, கமல் பாக்ரியை களமிறக்கி உள்ளது. டெல்லி மேயர் தேர்தலில் பங்கேற்கப் போவது இல்லை என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இன்று காலை 11 மணிக்கு மேயர் தேர்தல் நடைபெற இருந்தது. முன்னதாக மேயர் தேர்தலை முன்வைத்து டெல்லி துணை நிலை ஆளுநர் மற்றும் முதல்வர் கெஜ்ரிவால் இடையே பெரும் மோதல் நிகழ்ந்து வருகிறது. டெல்லி மேயர் தேர்தலை நடத்துவதற்காக முகேஷ் கோயலை நியமிக்க முதல்வர் கெஜ்ரிவால் பரிந்துரைத்தார். ஆனால் ஆளுநர் வினய் குமார் சக்சேனாவோ, பாஜகவின் சத்ய சர்மாவை இடைக்கால சபாநாயகராக நியமித்தார். இதனை முதல்வர் கெஜ்ரிவால் கடுமையாக எதிர்த்திருந்தார். இந்த பரபரப்புகளுக்கு இடையேதான் இன்று மேயர் தேர்தல் நடைபெற இருந்தது.
டெல்லி மேயர் பதவி என்பது ஐந்தாண்டுகளுக்கு சுழற்சி முறையிலானது. முதலாமாண்டு பெண்களுக்குரியது. இன்றைய மேயர் தேர்தலில் பங்கேற்காத காங்கிரஸ், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்வோம் எனவும் அறிவித்திருக்கிறது. இதனை டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி அறிவித்தார்.
இந்நிலையில் இன்று காலை டெல்லி மாநகராட்சியில் மேயர் தேர்தல் நடைபெற இருந்த போது ஆம் ஆத்மி, பாஜகவினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் பெரும் பதற்றம் நிலவியது. டெல்லி மாநகராட்சி மன்றமே போர்க்களம் போல மாறியது. இதனைத் தொடர்ந்து டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் எப்போது நடைபெறும் எனவும் அறிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications