டெல்லி சட்டசபையில் ஆளுநருக்கு எதிராக ஆளும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் விடிய விடிய போராட்டம்!
டெல்லி: ரூ1,400 கோடி ஊழல் முறைகேடு புகாரில் சிக்கிய டெல்லி ஆளுநர் சக்சேனா பதவி விலக வலியுறுத்தி டெல்லி சடசபையில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தினர். ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்களுக்கு போட்டியாக பாஜக எம்.எல்.ஏக்களும் போராட்டம் நடத்தியதால் டெல்லியில் பரபரப்பு நிலவியது.

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அமைச்சர்களுக்கு எதிராக மத்திய விசாரணை ஏஜென்சிகள் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீதும் பல்வேறு வழக்குகள் பாய்ந்து விசாரிக்கப்பட்டுள்ளார்.
இன்னொரு பக்கம் டெல்லி ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாகவும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி வருகிறார். இந்த நிலையில் டெல்லி அரசியலில் புதிய திருப்பமாக ஆளுநர் சக்சேனா மீதான ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
2016-ம் ஆண்டு காதி கிராம தொழில் ஆணையத்தின் தலைவராக இருந்தார் தற்போதைய ஆளுநர் சக்சேனா. அப்போது ரூ1,400 கோடி ஊழல் குற்றச்சாட்டுகளில் சக்சேனா சிக்கினார். இந்த விவகாரம்தான் இப்போது பூதாகரமாகி உள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ஆளுநர் சக்சேனாவை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி போர்க்கொடி தூக்கி உள்ளது ஆம் ஆத்மி கட்சி.

இதற்காக டெல்லி சட்டசபைக்குள் இரவு முழுவதும் தங்கி ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு போட்டியாக டெல்லி சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏக்களும் போராட்டம் நடத்தினர். இந்த போட்டி போராட்டங்களால் டெல்லியில் விடிய விடிய பரபரப்பு நீடித்தது.












Click it and Unblock the Notifications