அமித்ஷா இல்லம் முன்பு போராட முயற்சி... ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 4 பேர் அதிரடி கைது!
புதுடெல்லி: தலைநகர் டெல்லி மாநகராட்சி நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
உள்துறை அமைச்சரின் இல்லத்திற்கு வெளியே எந்தவொரு கூட்டமும், ஆர்ப்பாட்டமும் நடத்த அனுமதி இல்லை என டெல்லி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

தலைநகர் டெல்லியில் உள்ள குடிமை மைய கட்டிடத்தின் வளாகத்தைப் பயன்படுத்துவதற்காக தெற்கு எம்.சி.டி வாடகைக்காக செலுத்த வேண்டிய ரூ.2,457 கோடியை வடக்கு எம்.சி.டி தள்ளுபடி செய்ததாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. இந்த கட்டிடம் அதிகாரப்பூர்வமாக வடக்கு எம்சிடிக்குச் சொந்தமானது எனவும் அந்த கட்சி கூறியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி குடிமை அமைப்பால் இந்த நிதி முறைகேடாக பயன்படுத்தபட்டதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில் இதனை கண்டித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லம் முன்பும், டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலின் இல்லத்திற்கு முன்பும் போராட்டம் நடத்தப்படும் என ஆம் ஆத்மி ஏற்கனேவே அறிவித்து இருந்தது.

இதற்காக ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் ராகவ் சாதா, ரிது ராஜ், குல்தீப் குமார் மற்றும் சஞ்சீவ் ஜா ஆகியோர் அமித்ஷா இல்லம் நோக்கி சென்றபோது, ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி இல்லை என கூறிய போலீசார் அவர்களை கைது செய்தனர். இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்துறை அமைச்சரின் இல்லத்திற்கு வெளியே எந்தவொரு கூட்டமும், ஆர்ப்பாட்டமும் நடத்த அனுமதி இல்லை என விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications