கெஜ்ரிவாலின் தனி செயலாளர் தாக்கியதாக ஆம் ஆத்மி பெண் எம்.பி புகார்.. டெல்லியில் பரபர!
டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அவரின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி-யும், டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான ஸ்வாதி மாலிவால் புகார் தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளராக இருந்து வருபவர் பிபவ் குமார். இவரது நியமனம் சட்ட விரோதமானது என அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.பியும், டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான சுவாதி மாலிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று காலை 10 மணியளவில், ஆம் ஆத்மி கட்சி எம்.பி ஸ்வாதி மாலிவால் டெல்லி காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு, டெல்லி முதல்வர் இல்லத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளரால் தாக்கப்பட்டதாக புகார் தெரிவித்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து, டெல்லி போலீசார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது, ஸ்வாதி மாலிவால் முதல்வர் வீட்டில் இல்லை. ஸ்வாதி மாலிவால் புகார் தொடர்பாக காவல்துறை விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், ஸ்வாதி மாலிவால் எழுத்துப்பூர்வமாக புகார் தெரிவில்லை என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
சுவாதி மாலிவால், முதல்வரின் முன்னாள் தனி உதவியாளரால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ள சம்பவத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. கெஜ்ரிவாலின் பி.ஏ பிபவ் குவார், சுவாதி மாலிவாலை அடித்தாரா? இதற்கு முதல்வர் அலுவலகம் விளக்கம் அளிக்குமா? என பாஜக தலைவர் கபில் மிஸ்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அண்மையில் தான் ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில் ஆம் ஆத்மி பெண் எம்.பி, டெல்லி முதல்வர் இல்லத்தில் தான் தாக்கப்பட்டதாக புகார் தெரிவித்த சம்பவம் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications